சாமியார் பேச்சைக் கேட்டு தேசியப் பங்குச்சந்தை நடத்திய அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவின் மும்பை இல்லத்தில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சாமியார் பேச்சைக் கேட்டு தேசியப் பங்குச்சந்தை நடத்திய அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவின் மும்பை இல்லத்தில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை வரைபதவி வகித்தார். இவரின் பதவிக்காலத்தில் தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் என்ற மிக முக்கிய பதவிக்கு ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இவருக்கும் பங்குச்சந்தைக்கும் பெரிதாக தொடர்பு இல்லாதவர். ஆனாலும், இவர் மாதம் ரூ.15 லட்சத்தில் நியமிக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.1.68 கோடி ஊதியம்வழங்கப்பட்டது. 2014ம் ஆண்டு சுப்ரமணியன் ஊதியம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.2.01 கோடியாக உயர்த்தப்பட்டது,அடுத்த சில மாதங்களிலேயே 15 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.2.31 கோடியாக அதிகரிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு சுப்பிரமணியனுக்கான செலவு மட்டும் ரூ.5 கோடியாக அதிகரித்தது.
இந்நிலையில் சுப்பிரமணியன் நியமனத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதாகவும், கட்டுப்பாடுகளை மீறி அவருக்கு ஏராளமான சலுகைகள், ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்புான செபி விசாரணை நடத்தியதில் ராமகிருஷ்ணா, கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் உள்ள ஒரு சாமியாரின் ஆலோசனையின்படிதான் நடந்துள்ளார். அவரின் அறிவுரைகள், கட்டளைப்படிதான் தேசியப் பங்குச்சந்தையையும் நடத்தியுள்ளார்.
தேசியப் பங்குசந்தையின் ரகசிய ஆவணங்கள், கோப்புகள் போன்றவற்றை மின்அஞ்சல் மூலம் அந்த சாமியாருக்கு அனுப்பிவைத்து அவரின் சொல்படி அனைத்து முடிவுகளையும் சித்ரா எடுத்துள்ளார். விதிமுறைகள் மீறப்பட்டது உறுதியானது, மேலும் பல்வேறுஅதிர்ச்சிக்குரிய தகவல்களும் வெளியாகின.
தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.5 கோடிவரை இழப்பு ஏற்படுத்தியது, விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை சித்ரா ராமகிருஷ்ணா செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதலால், முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன், ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன், ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் அபராதமாக செபி விதி்த்தது
இந்நிலையில் பங்குச்சந்தையின் பல்வேறு தகவல்களையும் பட்டியலிடுவதற்கு முன்பை பல்வேறு நிறுவனங்களுக்கும் பகிர்ந்துஅதன் மூலம் பல்வேறு ஊழல்களை சித்ரா ராமகிருஷ்ணா செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதையடுத்து, இன்று காலை முதல் மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணா இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள். ஏறக்குறைய 8 அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் சித்ரா ராமகிருஷ்ணா வசிக்கிறார்,அவரின் தாய் தனியாக வேறு ஒருவீட்டில் வசி்க்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமானவரித்துறை நடத்திவரும் சோதனையில் கைப்பற்றப்பட்ட விவரங்கள் குறித்து ஏதும் அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை.