வேலை கிடைக்காமல் கழுதைப்பண்ணை தொடங்கிய இளைஞர்! லிட்டர் ரூ.5000 க்கு கழுதைப்பால் விற்பனை அமோகம்!

By SG BalanFirst Published Apr 21, 2024, 11:14 PM IST
Highlights

கழுதைப்பால் மனித பாலை ஒத்திருக்கிறது. குழந்தைகளுக்கு, குறிப்பாக பசும்பால் அருந்த ஒவ்வாமை உள்ளவர்களுக்கு கழுதைப்பால் சிறந்த மாற்றாக இருக்கும் என்று அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் அறிக்கை கூறுகிறது.

குஜராத் மாநிலத்தில் கழுதைப் பண்ணை தொடங்கிய ஒருவர் ஆன்லைனில் கழுதையின் பாலை பசும்பாலைவ விட 70 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்கிறார். அவர் விற்கும் கழுதைப் பாலுக்கு நல்ல கிராக்கியும் இருக்கிறது.

குஜராத்தில் படான் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில் 42 கழுதைகள் கொண்ட கழுதைப்பண்ணையை அமைத்துள்ளார் தீரேன் சோலங்கி. தனது பண்ணையில் இருந்து தென் மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கழுதைப்பால் சப்ளை செய்து மாதம் ரூ.2-3 லட்சம் சம்பாதித்து வருகிறார்.

இந்தத் தொழிலில் இறங்கியது பற்றி தீரேன் சோலங்கியே கூறுகையில், "நான் ஒரு அரசாங்க வேலை தேடிக்கொண்டிருந்தேன். எனக்கு சில தனியார் கம்பெனிகளில் வேலை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த வேலையில் சேர்ந்தால், வரும் சம்பளம் குடும்பச் செலவுகளுக்கே சரியாக இருக்கும்.

அந்த நேரத்தில் நான் தென்னிந்தியாவில் கழுதை வளர்ப்பு பற்றி அறிந்தேன். அது சம்பந்தமாக சிலரைச் சந்தித்து ஆலோசனை பெற்று, 8 மாதங்களுக்கு முன்பு எனது கிராமத்தில் இந்தப் பண்ணையை அமைத்தேன்" என்கிறார்.

குழந்தைகளை வைத்து 1000 டீப்ஃபேக் ஆபாசப் படங்களை உருவாக்கிய குற்றவாளிக்கு என்ன தண்டனை தெரியுமா?

ஆரம்பத்தில் 22 லட்சம் முதலீட்டில் 20 கழுதைகளுடன் தொழிலைத் தொடங்கினார். ஆரம்பம் அவருக்குக் கடினமாகவே இருந்தது. குஜராத்தில் கழுதைப்பாலுக்கு கிராக்கி இல்லை. முதல் ஐந்து மாதங்களில் சோலங்கி எதுவும் சம்பாதிக்கவில்லை. பின்னர் அவர் தென்னிந்தியாவில் உள்ள நிறுவனங்களை அணுகத் தொடங்கினார்.

அங்கு கழுதைப் பால் தேவை உள்ளதை அறிந்து அவர்களுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்தார். இப்போது அவர் கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு கழுதைப்பால் விநியோகம் செய்கிறார். கழுதைப்பாலை பயன்படுத்தும் அழகுசாதன தயாரிப்பு நிறுவனங்கள் உள்பட பலரும் அவரிடம் வாடிக்கையாளராக உள்ளனர்.

ஒரு லிட்டர் பசும்பால் ரூ.65க்கு விற்கப்படும் நிலையில் சோலங்கி விற்கும் கழுதைப்பாலின் விலை லிட்டருக்கு ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை உள்ளது. கறந்த பால் புதியதாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஃப்ரீசர்களில் சேமிக்கப்படுகிறது. பாலை உலர்த்தி, பால் பவுடராக்கினால் கிலோ ஒரு லட்சம் வரை விலை போகிறது.

இப்போது அவரது பண்ணையில் 42 கழுதைகளை வைத்துள்ளார் சோலங்கி. இதுவரை சுமார் 38 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். இதுவரை மாநில அரசிடம் இருந்து எந்த உதவியும் பெறவில்லை. சொந்த உழைப்பிலேயே முதலீட்டையும் அதிகரித்து தொழிலை விரிவுபடுத்தி இருக்கிறார்.

கழுதைப்பாலின் சிறப்பு:

பண்டைய காலங்களில் கழுதை பால் பரவலாக பயன்படுத்தப்பட்டது. எகிப்திய ராணி கிளியோபாட்ரா அதில் குளித்ததாக கதைகள் உள்ளன. கிரேக்கர்கள் ஹிப்போகிரட்டீஸ், கல்லீரல் பிரச்சனைகள், மூக்கடைப்பு, விஷமுறிவு மற்றும் காய்ச்சலுக்கு கழுதைப்பாலை மருந்தாக பயன்படுத்தியதாகச் சொல்லபடுகிறது.

கழுதைப்பால் மனித பாலை ஒத்திருக்கிறது. குழந்தைகளுக்கு, குறிப்பாக பசும்பால் அருந்த ஒவ்வாமை உள்ளவர்களுக்கு கழுதைப்பால் சிறந்த மாற்றாக இருக்கும் என்று அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் அறிக்கை கூறுகிறது.

பெயர்ந்து வரும் புதிய தார் சாலை! திருப்பத்தூர் அருகே 2 கி.மீ. தூரத்துக்கு மட்டமான ரோடு... வைரல் வீடியோ!

click me!