
அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி வரும் திறமையான, பயிற்சி பெற்ற, தகுதியான அக்னி வீரர்களுக்கு மகிந்திரா நிறுவனம் பணி வாய்ப்பு வழங்கும் என்று மகிந்திரா அன்ட்மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா அறிவித்துள்ளார்.
ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை கடந்த 14ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 17.5 வயதிலிருந்து 21 வயதுக்குள் இருப்பவர்கள் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் ராணுவத்தில் நியமிக்கப்படுவார்ள். பணிக்காலம் முடிந்து செல்வோரில் 25 சதவீதம் நிரந்தப்பணிக்கு அனுப்பப்படுவார்கள். இந்தத் திட்டத்துக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து வயது வரம்பை 23 ஆக மத்திய அரசு உயர்த்தியது. இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு அக்னிவீரர்கள் என்று பெயர்.
அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெறக்கோரி பல்வேறு மாநிலங்களிலும் கடந்த வாரம் போராட்டம், வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. இன்று பாரத் பந்த் நடத்தவும் பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ர்புக் கிளம்பி வரும்நிலையில் அக்னி பாத்த திட்டத்தில் பணியாற்றி முடித்துவரும் இளைஞர்களுக்கு மகிந்திரா நிறுவனம் பணி வழங்கத் தயாராக இருக்கிறது என்று மகிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் வருத்தமளிக்கின்றன.இந்த திட்டம் கடந்த ஆண்டு வந்தபோது,நான் அப்போதும் கூறியது என்னவென்றால், ஒழுக்கமும், திறமையும்கொண்ட அக்னிவீரர்கள் வேலைபெறுவதற்கு தகுதியானவர்கள் என்றேன். தகுதிவாய்ந்த, பயிற்சி பெற்ற அக்னி வீரர்களை பணிவாய்ப்பு வழங்குவதற்கு மகிந்திரா நிறுவனம் வரவேற்கிறது.
கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்ற அக்னிவீரர்களுக்கு ஏராளமானதிறமை இருக்கிறது. தலைமைப்பண்பு, குழுவாகப் பணியாற்றுதல், உடல்ரீதியான பயிற்சி போன்ற தகுதிகள் தொழில்துறை சந்தைக்கு ஏற்ற தீர்வுகளை வழங்குகின்றன. நிர்வாகம், சப்ளை, மேலாண்மை அனைத்திலும் இவர்களின் திறமை பளிச்சிடும்” எனத் தெரிவித்துள்ளார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.