காரைக்கால் துறைமுகத்தை ஏலத்தில் அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் லிமிடெட் (APSEZ) 1,200 கோடிக்கு எடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏலத்தில் வேதாந்தா நிறுவனமும் பங்கெடுத்து இருந்தது.
காரைக்கால் துறைமுகத்திற்கு கடன் வழங்கியவர்கள் கடந்த வாரம் கூடி, அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் லிமிடெட் முயற்சிக்கு ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது ஏலம் எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், இறுதி ஒப்புதலுக்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி அரசு மற்றும் சென்னையைச் சேர்ந்த மார்க் லிமிடெட் நிறுவனமும் பொது-தனியார் பங்களிப்பின் கீழ் இந்த துறைமுகத்தை 600 ஏக்கர் பரப்பளவில் கட்டி இருந்தன. கடனை திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, நிலுவையில் 3,000 கோடி ரூபாய் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
துறைமுக வணிகத்தை விரிவுபடுத்தும் அதானி குழுமம், புதுச்சேரியில் அமைந்துள்ள தெற்கு துறைமுகத்தை இயற்கை சூழலுக்கு ஏற்றதாக பார்க்கிறது. வேதாந்தா உலோகங்கள் மற்றும் சுரங்க வணிகங்களுக்கு கணிசமான அளவு மூலப்பொருட்களை கொண்டு வருவதால் இந்த ஏலத்தில் பங்கேற்று இருந்தது.
Gold Rate Today: உச்சத்தில் தங்கம் விலை! சவரன் ரூ.40ஆயிரத்தைக் கடந்தது! நிலவரம் என்ன?
அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களை இயக்கி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான முந்த்ரா துறைமுகம் உட்பட 12 துறைமுகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கங்காவரம் துறைமுகத்தை ரூ. 6,200 கோடிக்கு வாங்கியது. காரைக்கால் துறைமுகத்தை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் தற்போது முதன் முறையாக கையகப்படுத்தியுள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ இன்ஃப்ரா, ஜிண்டால் பவர், அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் லிமிடெட், வேதாந்தா மற்றும் ஆர்கேஜி ஃபண்ட் மற்றும் சகாசியஸ் கேபிட்டல் ஆகிய நிறுவனங்கள் ஏலம் கோருவதாக இருந்தது. ஆனால், அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் லிமிடெட் மற்றும் வேதாந்தா மட்டுமே பிணைப்பு நிதியை சமர்ப்பித்து இருந்தன என்று கூறப்படுகிறது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி, காரைக்கால் துறைமுகத்தில் ஏற்பட்டு இருக்கும் சிக்கலை தீர்ப்பதற்கான நிபுணராக ராஜேஷ் ஷேத் என்பவரை நியமித்து இருந்தது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என மொத்தம் 11 பேர் காரைக்கால் துறைமுகத்திற்கு ரூ.1,362 கோடி கடன் வழங்கி இருந்தனர்.முறையாக கடன் தொகையையும், வட்டியையும் செலுத்தாதால், கடன் வளர்ந்தது.
அசல் கடன் வழங்கியவர்கள் இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் வங்கி (பின்னர் பிஎன்பி உடன் இணைக்கப்பட்டது), ஓரியண்டல் வங்கி (பின்னர் பிஎன்பி உடன் இணைக்கப்பட்டது), சிண்டிகேட் வங்கி (பின்னர் கனரா வங்கியில் இணைக்கப்பட்டது), மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐஐஎப்சி, ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் (பின்னர் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது) மற்றும் கார்ப்பரேஷன் வங்கி (பின்னர் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது). ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் மற்றும் கார்ப்பரேஷன் வங்கியைத் தவிர, மற்ற ஒன்பது பேர், 2015 ஆம் ஆண்டில், எடெல்வீஸ் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு தங்களது கடனை விற்றனர்.
சமீபத்தில்தான் மும்பையில் இருக்கும் தாராவி குடிசைப் பகுதி மறுசீரமைப்பு திட்டத்தை அதானி குழுமம் ரூ. 5,069 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. தற்போது காரைக்கால் துறைமுகத்தையும் எடுத்து இருக்கிறது.