அமெரிக்க பெண்புலிக்கு கொரோனா..! விலங்குகளையும் தாக்கியது கொடிய வைரஸ்..!

By Manikandan S R SFirst Published Apr 6, 2020, 12:52 PM IST
Highlights

பாதிக்கப்பட்ட நபரின் மூலமாக அங்கிருந்த நாடியா என்கிற பெண் புலிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புலியை மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருக்கும் 6 புலிகளுக்கு வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் விலங்குகளை தாக்காது என்கிற தகவல் உலக மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்தது. பல்வேறு அறிஞர்களும் அதை ஆமோதிக்கும் வகையில் கருத்துகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அதை பொய்யாக்கும் விதமாக அமெரிக்காவில் புலி ஒன்றிற்கு முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பெண் புலி ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த பூங்காவில் பணியாற்றிய ஊழியருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்ட அவரை பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து உயிரியல் பூங்காவில் இருந்த அனைவருக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே பாதிக்கப்பட்ட நபரின் மூலமாக அங்கிருந்த நாடியா என்கிற பெண் புலிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புலியை மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருக்கும் 6 புலிகளுக்கு வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. விலங்குகளிடம் வைரஸ் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தெரியாததால் பூங்காவில் இருக்கும் அனைத்து விலங்குகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!