அதிபர் மாளிகைக்குள் நுழைந்த தலிபான்கள்.. அலறியடித்து ஓடிய அதிபர் அஷ்ரப் கனி.. போர் முடிந்துவிட்டதாக அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Aug 16, 2021, 9:47 AM IST
Highlights

காபுலில் இருந்து ஜனாதிபதியும், இராஜதந்திரிகளும் தப்பி தலைமறைவானதையடுத்து, ஆப்கனில் போர் முடிந்துவிட்டதாக  தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும்-ஆப்கனிஸ்தான் படைக்கும் இடையே ஏற்பட்ட உள்நாட்டுப் போரில், தலிபான்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், கடந்த ஆண்டு முதல் அங்கிருந்து வெளியேற தொடங்கின.

காபுலில் இருந்து ஜனாதிபதியும், இராஜதந்திரிகளும் தப்பி தலைமறைவானதையடுத்து, ஆப்கனில் போர் முடிந்துவிட்டதாக  தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும்-ஆப்கனிஸ்தான் படைக்கும் இடையே ஏற்பட்ட உள்நாட்டுப் போரில், தலிபான்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், கடந்த ஆண்டு முதல் அங்கிருந்து வெளியேற தொடங்கின. இதையடுத்து மீண்டும் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றும் முனைப்பில் தாக்குதல் தீவிரப்படுத்தினர். கடந்த சில நாட்களாக தாலிபன்கள் தாக்குதல் பன் மடங்கு அதிகரித்தது. இதனால் தலைநகர் காபுல் மற்றும் முக்கிய நகரங்களில் ஒன்றான கந்தகார் போன்றவை  தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 

இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபுலில் தலிபான்கள் நுழைந்தனர். நிலைமை கையை மீறிச் சென்றதை உணர்ந்த ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி அவசர அவரசமாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேறினார். அதேபோல் துணை அதிபர் அப்துல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. காபுல் நகரம் தலிபான்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து அவசரமாக வெளியேறி வருகின்றனர். விரைவில் தலிபான்கள் ஒரு புதிய அரசை நிறுவ திட்டமிட்டு வருவதுடன், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், முஜாஹிதீன் களுக்கும் இன்று ஒரு சிறந்த நாள், அவர்கள் 20 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியின் பலனை, தியாகத்தை அறுவடை செய்து இருக்கின்றனர் என்று தாலிபன் அரசியல் அலுவலக செய்தி தொடர்பாளர் முகமது நசீம் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார். முன்னதாக காபுலைவிட்டு வெளியேறிய அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, மேலும், மக்கள் ரத்தம் சிந்துவதை விரும்பாததால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில் ஏராளமான தலிபான் போராளிகள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர், அதன் காட்சிகளை அல்ஜசீரா தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியின் வடிவம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தலிபான் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அதே நேரத்தில் உலகத்துடன் ஒன்றி வாழவே தலிபான்கள் விரும்புகின்றனர். தனிமையில் வாழ விரும்பவில்லை, எனவே சர்வதேச உறவுகளே முன்வாருங்கள் என அழைப்பு விடுத்தார். நாங்கள் தேடியை நாங்கள் அடைந்துள்ளோம். இதே நமது நாட்டின் சுதந்திரம், நமது மக்களின் சுதந்திரம் என்று அவர்கள் முழங்கினார். இனி யாரும் எங்களது நிலத்தை குறிவைத்து, எங்கள் நிலத்தை அனுபவிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம், அதே நேரத்தில் மற்றவர்களுக்கு தீங்கு செய்யவும் நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு தலிபான் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். 

 

click me!