போர் பதற்றத்தை தடுக்க சர்வதேச ஆதரவு வேண்டும்... வேண்டுகோள் விடுத்த தைவான் அதிபர்!!

By Narendran SFirst Published Aug 7, 2022, 6:54 PM IST
Highlights

தைவானில் நிலவும் போர் பதற்றத்தை தடுக்க சர்வதேச அளவில் ஆதரவு வேண்டும் என அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தைவானில் நிலவும் போர் பதற்றத்தை தடுக்க சர்வதேச அளவில் ஆதரவு வேண்டும் என அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 1949ம் ஆண்டு சீனாவில் நடந்த உள்நாட்டுப் போரில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சீனாவும் தைவானும் பிரிந்தன. இருப்பினும் தைவானுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் சுதந்திரம் குறித்து எந்த நாடு பேசினாலும், வெளிநாட்டு தலைவர்கள் சென்றாலும் சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அமெரி்க்க பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது. நான்சி பெலோசியின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையும் படிங்க: காசா முனையில் நிலவும் பதற்றம்.. இஸ்ரேல் பயங்கர வான்வெளி தாக்குதல்.. பயங்கரவாத அமைப்பின் முக்கிய 2 தளபதி பலி

சீனாவின் எதிர்ப்பையும் மீறி, நான்சி பெலோசி விமானம் மூலம் தைவானுக்குச் சென்றார். நான்சி பெலோசியின் வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது தைவான் எல்லை அருகே சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தைவானின் எல்லைப்பகுதி அருகே சீன ராணுவம் அதிநவீன ஏவுகணைகளை வீசி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தைவான் நாட்டின் முக்கிய தீவு ஒன்றின் மீது தாக்குதல் நடத்த சீனா தயாராகி விட்டதாக தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இலங்கை பொருளாதார சிக்கல் இன்னும் ஓர் ஆண்டு நீடிக்கும்: அதிபர் விக்ரமசிங்கே குமுறல்

சீனாவின் பல்வேறு போர்க்கப்பல்களும், ராணுவ விமானங்களும் தங்கள் எல்லைக்குள் நுழைந்திருப்பதாக தைவான் அரசு கூறியுள்ளது. இந்த நிலையில், தைவான் பிராந்தியத்தில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதைத் தடுக்க சர்வதேச ஆதரவை வழங்க தைவான் அதிபர் சாய் இங்-வென் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், தைவான் அரசும் ராணுவமும் சீனாவின் இராணுவப் பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளை, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. தேவையான பதிலடி நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளன. தைவான் பிராந்தியத்தில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதைத் தடுக்க சர்வதேச ஆதரவை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!