கொழும்பு விமானநிலையத்தையும் குறி வைத்த தீவிரவாதிகள் !! குண்டுகள் வெடிக்குமுன் கண்டுபிடிக்கப்பட்டதால் தப்பிய பயணிகள் !!

By Selvanayagam PFirst Published Apr 22, 2019, 10:34 AM IST
Highlights

இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பயங்கர குண்டு வெடிப்பில் இருந்து கொழும்பு விமானநிலையம் தப்பியது.

இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 290 பேர் பலியாகினர். 

ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற இந்த வெடிகுண்டு தாக்குதல் இந்தியா உள்பட உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 450-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ள இலங்கை போலீஸ் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த ஒரு இயக்கமும் தற்போது வரை பொறுப்பேற்றதாக செய்திகள் வரவில்லை. 

இலங்கையில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.  கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

கலவர தடுப்பு போலீசார், சிறப்பு அதிரடிப்படை போலீசார் உள்பட ஏராளமான போலீசார் விமான நிலையத்தை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், கொழும்பு விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டை கைப்பற்றிய விமானப்படை அதிகாரிகள் செயலிழக்க வைத்தனர்.

இந்த குண்டு வெடித்திருந்தால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது. நல்வாய்ப்பாக குண்டு வெடிக்காததால் கொழும்பு சர்வதேச விமானநிலையம் தப்பித்தது.

click me!