இலங்கையில் போராட்டக்காரர்களை கண்காணிக்க களத்தில் இறங்கிய ராணுவம்

By Dhanalakshmi GFirst Published Jul 14, 2022, 1:38 PM IST
Highlights

இலங்கையில் இருந்து தப்பி மாலத்தீவில் அடைக்கலமாகி இருந்த கோத்தபய ராஜபக்சே இன்று சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சிங்கப்பூர் சென்றார். அவருடன் அவரது மனைவியும் சென்றுள்ளார். இந்த நிலையில் போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ராணுவம் களத்தில் இறங்கியுள்ளது.

இலங்கையில் இருந்து தப்பி மாலத்தீவில் அடைக்கலமாகி இருந்த கோத்தபய ராஜபக்சே இன்று சிங்கப்பூர் சென்றார். சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் அவர் சிங்கப்பூர் சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இலங்கை வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளது. அந்த நாட்டை ஆட்சி செய்தவர்களால்தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது என்று பரவலான கருது வெளியாகி இருந்த  நிலையில், கடந்த வாரம் கோத்தபய ராஜபக்சே அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து இரவோடு இரவாக தப்பி, ராணுவ அலுவகத்தில் தங்கினார்.

இதையடுத்து அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவரது வீட்டை சுற்றுலா தலமாக மாற்றினர். இத்துடன் பிரதமரின் அலுவலகத்தையும் கைப்பற்றினர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டுக்கு தீ வைத்தனர். இதன் தொடர்ச்சியாக ராஜினாமா செய்வதாக கூறி இருந்த கோத்தபய இதுவரை ராஜினாமா செய்யவில்லை. பிரதமர் ரணிலும் ராஜினாமா செய்யவில்லை.

sri lanka crisis: கொழும்பில் தொடரும் பதற்றம்.. வேறு வழியில்லாமல் மீண்டும் ஊரடங்கு அமல்

சிங்கப்பூர் சென்ற பின்னர் கோத்தபய ராஜினாமா செய்யலாம் என்று கூறப்படுகிறது. நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நியமிப்பதாக கோத்தபய தெரிவித்து இருந்ததாக செய்தி வெளியாகி இருந்தது. இதன்படி இடைக்கால பிரதமராக ரணில் தேர்வுக்கான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார்.

இவர்களது இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களை மேலும் கோபமடையச் செய்தது. நேற்று பிரதமர் அலுவலத்தை கைப்பற்றினர். கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அறிவித்தனர். இதையடுத்து அவசர நிலையை ரணில் பிரகடனம் செய்தார். இன்று காலை நீக்கப்பட்டது.

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட தமிழ் தலைவர்களிடம் கலந்துரையாட வேண்டும்: ஜனத் ஜெயசூர்யா

இந்த நிலையில் மீண்டும் இன்று மதியத்தில் இருந்து நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. போராட்டக்காரர்களும் அதிபர் வீடு, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே மாலத்தீவில் தங்கியிருந்த கோத்தபய தனது மனைவியுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். SV 788 என்ற சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் சென்றுள்ளார். இவர் நாட்டை விட்டு வெளியேறினாலும் இன்னும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை.

இவர் சிங்கப்பூர் சென்று இருக்கும் நிலையில், அங்கிருந்து சவுதி செல்லலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. போராட்டக்காரர்கள் கொழும்பு நகரில் இருந்து வெளியேறாத நிலையில் அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ராணுவம் தற்போது களத்தில் இறங்கியுள்ளது.

click me!