
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த Donald Trump-க்கு, Twitter உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் 45-வது அதிபரை தேர்வு செய்வதற்காக கடந்த 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனை பின்னுக்கு தள்ளிவிட்டு, குடியரசு கட்சி வேட்பாளர் Donald Trump வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி அமெரிக்க மக்களின் ஒரு சாராரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் புகார், இனவாதம் போன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான Trump, அதிபராக பதவியேற்கக் கூடாது என எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
3-வது நாளாக இன்று நியூயார்க் நகரில் பேரணி நடத்திய எதிர்ப்பாளர்கள், யூனியன் சதுக்கம் என்ற இடத்தில் ஒன்றுதிரண்டு, Trump-க்கு எதிராக கோஷமிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோன்று Florida மாகாணத்தில் Miami, Georgia மாகாணத்தில் Atlanta உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் Trump-ஐ அதிபராக ஏற்கமாட்டோம் என அவரது எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பொதுமக்களோடு மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். Minnesota மாகாணம் MinneaPolis, Colorado மாகாணம் Denver, Utah மாகாணம் Taylorsville போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள், Trump-க்கு எதிராக கோஷமிட்டவாறு பேரணி நடத்தினர்.
இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை ஊடகங்கள் தூண்டி விடுவதாக Donald Trump குற்றம்சாட்டியுள்ளார். இந்த சூழலில், Twitter உள்ளிட்ட சமூக வலைதளங்களில் Trump-க்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல்கள், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Trump-ஐ மட்டுமின்றி துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Mike Pence-ஐயும் சுட்டுக்கொல்ல வேண்டும் என்றும் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள Donald Trump, அதிபராக பதவியேற்ற மறுநாள், Washington நகரில், மாபெரும் மகளிர் பேரணி நடத்தப்படும் என முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Trump பதவியேற்றால் மகளிருக்கான பல உரிமைகள் பறிக்கப்படும் என பேரணி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.