
இலங்கையின் அதிகாரபூர்வ இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை தேர்வு செய்து பார்லிமென்ட் சபாநாயகர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் 15ஆம் தேதி பார்லிமென்ட் கூடுகிறது. இதைத் தொடர்ந்து 20ஆம் தேதி கூடும் எம்பிகள் கூட்டத்தில் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
இலங்கை தலைநகர் தற்போது போராட்டக்களமாக மாறி உள்ளது. கொழும்பு மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது அரசியல் எதிர்ப்புக் களமாக இல்லாமல், மக்களின் போராட்டக்களமாக, மக்களுக்கான களமாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களை அடக்குவதற்கு அனைத்துப் படைகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்களை கைது செய்வதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வதற்கு ஒப்புக் கொண்டு இருந்த நிலையில் மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில்தான் இன்று கொழும்புவில் போராட்டம் உக்ரமடைந்துள்ளது.
அதே நேரத்தில் மாலத்தீவில் தஞ்சம் அடைந்து இருக்கும் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்தும், வெளியேற வலியுறுத்தியும் பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது.
இலங்கையின் இடைக்கால அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே; மக்கள் கொந்தளிப்பு!!
இதற்கிடையே இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு எந்த வகையிலும் இந்தியா உதவவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. முறையாக இன்னும் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.