Russia Ukraine War: உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி இன்று பேசுகிறார்..போர் முடிவுக்கு வருமா என்று எதிர்பாரப்பு

By Thanalakshmi VFirst Published Mar 7, 2022, 11:42 AM IST
Highlights

Russia Ukraine War:உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் இன்று பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
 

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி போர் தொடுத்தது. தொடர்ச்சியாக முக்கிய நகரங்களை ரஷ்ய படை கைப்பற்றி வருகின்றன. தொடந்து குண்டு மழைகளை ரஷ்ய இராணுவம் பொழிந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளது. மேலும் இரு தரப்பிலும் பல உயிர்கள் பலியாகியுள்ளன. தலைநகர் கீவை சுற்றிவளைத்து ரஷிய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ஆனால் அங்கு உக்ரைன் துருப்புகளின் கடுமையான பதிலடி காரணமாக ரஷ்ய படையினரால் தலைநகருக்குள் நுழைய முடியவில்லை.

இரு நாடுகளுக்கு இடையிலான இந்த சண்டையால் 11 நாட்களில் கிட்டதட்ட 15 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். போலந்து, ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்டவற்றில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனின் நாட்டின் மற்ற பகுதியில் போர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்யா. இந்நிலையில் போர் நிறுத்தம் காரணமாக பெலாரஸ் நாட்டில் உக்ரைன் - ரஷ்யா இரு நாடுகளும் இடையே, நடத்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது. 

மேலும் படிக்க: Russia Ukraine War: உக்ரைன் - ரஷ்யா மோதல்..தொடந்து குண்டு மழை..காயமடைந்த இந்திய மாணவன் தற்போதைய நிலை..?

அதன்படி வோல்னோவாகா, மரியுபோல் நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்ததை ரஷ்யா அறிவித்தது.ஆனால் அது தோல்வியடைந்ததாக கூறி, தற்போது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் தரை வழியாக அண்டை நாடுகளான ரூமேனியா, ஹங்கேரி, போலந்து  மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அழைத்து வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டு வருகின்றனர். இதுவரை 60 க்கும் மேற்பட்ட விமானங்களில் 16,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், கிழக்கு உக்ரைன் எல்லையில் உள்ள சுமியில் தான் தற்போது முழு கவனமும் இருப்பதாக தெரிவித்தார்.மேலும் அப்பகுதியில் தீவிர போர் தாக்குதல் நடைபெற்று வருவதால் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் போக்குவரத்து குறைபாடு காரணமாகவும் அங்குள்ளவர்களை மீட்டு, அண்டை நாடுகளுக்கு கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: Russia Ukraine War: தண்ணீர், உணவு கிடைக்கல..5 நாட்கள் பாதாளத்தில் இருந்தோம்.. மீண்ட தமிழ் மாணவர்கள் பகீர்..

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளிடையும் போர் நிறுத்தம் குறித்து இந்தியா சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சுமியில் தற்போதைக்கு, பதற்றம் நிலவி வருவதால், அப்பகுதியில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் விரைவில் அப்பகுதியில் போர் நிறுத்தம் நிகழும் என்றும் தெரிவித்தார். முன்னதாக கார்கிவ் நகரில் இருந்து வெளிநாட்டு மாணவர்களை மீட்க தயாராக இருந்தும், அதனை உக்ரைன் ராணுவம் தடுக்கிறது என்று ரஷ்யா பகிரங்கமாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். போர் நிறுத்தம், அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை, இந்திய மாணவர்கள் மீட்பு உள்ளிட்டவை குறித்து பேசப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

click me!