பன்றிக்கறி, நாய்க்கறி, பாம்புக்கறியால் பரவிய கொரோனா வைரஸால் கதறும் உலக நாடுகள்... அட, கட்டுப்படுத்த இதுபோதுமாம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 31, 2020, 5:44 PM IST
Highlights

. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வைரஸ் தாக்காமல் இருக்க சின்ன வெங்காயம் போதும் என்கிறார்கள் தமிழக உணவக விடுதி உரிமையாளர்கள். 

கொரோனா வைரஸ் எவ்வாறு தொடங்கியது? இந்த வைரஸ் வுஹான் கடல் உணவு சந்தையில் இருந்து தோன்றியதாகத் தெரிகிறது, அங்கு மர்மோட்டுகள், பறவைகள், முயல்கள், வெளவால்கள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. இதனால்தான் கொரோனா வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது.

 

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சீனாவில் மட்டும் வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. 8,100 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா என இதுவரை 21 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. சீனாவின் ஊஹானில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் சீனாவில் இருந்து திருவண்ணாமலை திரும்பிய பொறியாளர் ஒருவர், அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தற்போது வரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணிகள் மட்டுமே தற்போது நடந்து வருகிறது.

சர்வதேச சுகாதார அவசர நிலையாக கொரோனா வைரஸ் பாதிப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அதுபற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்படுகின்றன.இந்த நிலையில், காரைக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலான பிரெசிடெண்ட், “கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடுங்கள்” என்று போர்டு வைத்துள்ளனர்.

இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளரிடம் பேசுகையில், “65 ஆண்டுகாலம் எங்களது ஹோட்டல் பாரம்பரியம் உடையது. சின்ன வெங்காயம் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாகும். சின்ன வெங்காயம் மற்றும் நல்லண்ணெய் ஆகியவை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

ஆனால், தற்போதைய தலைமுறையினருக்கு சின்ன வெங்காயத்தின் அருமை தெரியவில்லை. இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படி ஒரு போர்டு வைத்தோம். சின்ன வெங்காயம் அதிகம் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால், எந்த வைரஸும் தாக்காது” என்கிறார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வைரஸ் தாக்காமல் இருக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடவும் என்று ஹோட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தின் மூலம் மீண்டும் வெங்காய விலை உயர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 
 

click me!