
பாகிஸ்தான் ராணுவத்துக்கு அனுமதி
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தனது ஆயுதப் படைகளுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் நடந்த கொடிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், புதன்கிழமை அதிகாலை இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பாகிஸ்தான் இறையாண்மை மீறப்பட்டு இருக்கிறதாம்:
ஐ.நா. சாசனத்தின் பிரிவு-51 இன் படி, அப்பாவி பாகிஸ்தானிய உயிர்களை இழந்ததற்கும் அதன் இறையாண்மையை அப்பட்டமாக மீறியதற்கும் பழிவாங்க, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில், இடத்தில் மற்றும் முறையில் தற்காப்புக்காக பதிலளிக்கும் உரிமையை பாகிஸ்தான் கொண்டுள்ளது," என்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது'' என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்படும் சூழ்நிலை மற்றும் அதன் சாத்தியமான தாக்கங்கள் குறித்து NSC விவாதித்தது. முன்னேற்றங்களை மேலும் மதிப்பிடுவதற்காக பிரதமர் ஷெரீப் மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பின்னர் பிரதமர் நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக இந்திய ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள முக்கிய பயங்கரவாத முகாம்களை இந்தியா குறிவைத்தது. இது இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.