
இந்தியாவிடம் இருக்கும் 5 ஆயிரம் ஆண்டு பழமையான வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட நடனமாடும் பெண் சிலையை மீட்டு வரக்கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
லாகூர் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கக் கோரி பாரிஸ்டர் ஜாவித் இக்பால் ஜாப்ரி என்பவர் மனு செய்துள்ளார்.
இது லாகூரில் உள்ள தொல் பொருள் அருங்காட்சியத்துக்கு சொந்தமானது, அதை இங்கே கொண்டு வர வேண்டும். இந்த சிலை ஐரோப்பாவில் உள்ள லியாநார்டோ டாவின்சியின், ‘மோனோலிசா’ ஓவியத்துக்கு இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. இதை நாம் பாதுகாக்க வேண்டும். உலகில் உள்ள முக்கிய தொல்பொருள் ஆய்வாளர்கள் சிந்து சமவௌி நாகரீகத்தின் முக்கிய அடையாளம் எனத் தெரிவித்துள்ளனர் என அவர் கோரியுள்ளார்.
பாகிஸ்தானில் இப்போது உள்ள சிந்து மாநிலத்தில் கடந்த 1926-ம் ஆண்டு சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஆய்வின் போது, இந்த நடனமாடும் பெண் சிலை பூமியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது கிறிஸ்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகள் முந்தைய பழமை உடையதாகும். இந்த சிலை 10.5 சென்டிமீட்டர் உயரம் கொண்டதாக இருக்கிறது.
பாகிஸ்தான் கலைபொருட்களுக்கான தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஜமால் ஷா இது குறித்து ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் எங்களுடைய பாரம்பரியத்தை பாதுகாக்க இந்த சிலையை மீட்டு வருவது முக்கியம் என் தெரிவித்துள்ளார்.