
Japan Invites India to join GCAP Program: ஜப்பான், இங்கிலாந்து மற்றும் இத்தாலி தலைமையிலான கூட்டு முயற்சியான அடுத்த தலைமுறை உலகளாவிய போர் விமானத் திட்டத்தில் (GCAP) பங்கேற்க ஜப்பான் இந்தியாவை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட GCAP திட்டம் இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு முயற்சியாகும்.
GCAP போர் விமானத் திட்டம்
இந்தத் திட்டம் அடுத்த தலைமுறை போர் விமானத்தை வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தான் GCAP திட்டத்தில் இணைந்துள்ள இங்கிலாந்து, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகள் கூடுதலாக ஒரு கூட்டாளியை தேடுகின்றன. இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும் நவம்பர் 19, 2024 அன்று சந்தித்து, GCAP திட்டத்தை மேலும் சர்வதேச கூட்டாளர்களைச் சேர்க்க விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
3 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை
அதாவது இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் GCAP திட்டத்தில் முன்னேற்றத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். அதே நேரத்தில் தற்போதுள்ள கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான தங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினர்.
இந்தியாவுக்கு அழைப்பு
இதனைத் தொடர்ந்து தான் GCAP போர் விமானத் திட்டத்தில் சேர இந்தியாவுக்கு ஜப்பான் தற்போது அழைப்பு விடுத்துள்ளது. ஜப்பானிய அதிகாரிகள் பிப்ரவரியில் இந்தியாவுக்கு பயணம் செய்தனர். அப்போது ஜப்பான்-இங்கிலாந்து-இத்தாலி “உலகளாவிய போர் விமானத் திட்டம் (GCAP) குறித்து அவர்கள் இந்திய அதிகாரிகளுக்கு இந்தியாவும் இந்த இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என வலியுறுத்தியதாக ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முடிவு என்ன?
GCAP திட்டத்தில் கூட்டாளர் நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதன் மூலம் இந்த திட்டத்தின் கணிசமான செலவுகளைக் குறைப்பதை ஜப்பான் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக முக்கிய ஆசிய நாடான இந்தியாவுடன் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்த ஜப்பான் முயல்கிறது. ஆனால் இது தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பானில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
சவுதி அரேபியாவும் இணைகிறதா?
GCAP போர் விமானத் திட்டம் அடுத்த தலைமுறை போர் விமானத்தின் வளர்ச்சியை மேற்பார்வையிடும், திறன் தேவைகளை அமைக்கும் மற்றும் திட்டத்தின் தொழில்துறை கட்டமைப்பை நிர்வகிக்கும். ஜப்பானின் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ், இத்தாலியின் லியோனார்டோ மற்றும் இங்கிலாந்தின் BAE சிஸ்டம்ஸ் ஆகியவை இந்த திட்டத்தை அமைப்பு ஒருங்கிணைப்பாளர்களாக வழிநடத்தும். GCAP போர் விமானத் திட்டத்தில் ஜப்பான் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருக்கும் அதே வேளையில் சவுதி அரேபியாவும் இந்த திட்டத்தில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.