மாலத்தீவு சுற்றுலா தரவரிசை: 5ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா!

By Manikanda PrabuFirst Published Jan 30, 2024, 11:11 AM IST
Highlights

மாலத்தீவு சுற்றுலா தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இந்தியா, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்ட விரிசலையடுத்து 5ஆவது இடத்திற்கு சென்றது

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பான புள்ளிவிவரங்களில் கடந்த மூன்று வாரங்களாக குறிப்பிடத்தக்க மாற்றத்தை மாலத்தீவு சந்தித்து வருகிறது. அதன்படி, மாலத்தீவு சுற்றுலா தரவரிசையில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த இந்தியா, ஜனவரி 28ஆம் தேதி தரவுகளின்படி, 5ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.

அந்த தரவரிசையின்படி, 18,561 பயணிகள் வருகைகளுடன் ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது. மாலத்தீவு சுற்றுலா சந்தைக்கு ரஷ்யாவினுடைய பங்கு 10.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டில் ரஷ்யா 2ஆவது இடத்தில் இருந்தது.

18,111 வருகைகள், 10.4 சதவீத சுற்றுலா சந்தை பங்குடன் இத்தாலி 2ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் இத்தாலி 6ஆவது இடத்தில் இருந்தது. 16,529 வருகைகள், 9.5 சதவீத சுற்றுலா சந்தை பங்குடன் சீனா 3ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் சீனா 3ஆவது இடத்தில் இருந்தது. 14,588 வருகைகள், 8.4 சதவீத சுற்றுலா சந்தை பங்குடன் இங்கிலாந்து 4ஆவது இடத்திலும், 13,989 வருகைகள் 8.0 சதவீத சுற்றுலா சந்தை பங்குடன் இந்தியா 5ஆவது இடத்திலும் உள்ளது.

அதேபோல், ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், போலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே 6,7,8,9,10ஆவது இடங்களில் உள்ளன.

செவ்வாய் கிரகத்தில் பண்டைய கால ஏரி.. ஆச்சர்யத்தில் நாசா விஞ்ஞானிகள்.. எப்படி இருக்குன்னு பாருங்க..?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, 209,198 சுற்றுலாப் பயணிகளின் வருகைகளுடன் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. அந்த ஆண்டிற்கான மாலத்தீவுகளின் சுற்றுலா சந்தையில் கிட்டத்தட்ட 11 சதவீதம் இந்தியாவின் பங்காக இருந்தது. ஆனால், ஜனவரி 2ஆம் தேதி பிரதமர் மோடியின் லட்சத்தீவு கடற்கரைச் சுற்றுலா மற்றும் மாலத்தீவுடனான இராஜதந்திர வீழ்ச்சி ஆகியவை இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தியுள்ளது.

மாலத்தீவு அரசு அண்மைக்காலமாகவே இந்தியாவுடன் விரோத போக்கை கையாள்கிறது. மாலத்தீவின் புதிய அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவாக உள்ளது. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. குறிப்பாக சீன உளவுக் கப்பலை அதன் தலைநகர் மாலேயில் சர்ச்சைக்குரிய வகையில் நிறுத்திவைத்த பிறகு, இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவுகள் மேலும் மோசமடைந்தன.

அதேபோல், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்களின் தரக்குறைவான விமர்சனங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஏராளாமான இந்தியர்கள் தங்களது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர். மேலும், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினரை திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

மனித மூளைக்குள் சிப்பை பொருத்திய எலான் மஸ்க்கின் நியூராலிங்க்.. சோதனை நபர் எப்படி இருக்கிறார்.?

அதேசமயம், மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்ஸுவுக்கு அந்நாட்டு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சீன உளவுக் கப்பல் விவகாரம் தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அது, அவர் மீதான பதவி நீக்க நடவடிக்கை கோரும் அளவுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!