
இலங்கை அதிபர் உடனடியாக பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து நகரின் வடக்கு, தெற்கு, மற்றும் மத்திய நுகேகொட காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமான நாடுகளில் பொருளாதர நெருக்கடி ஏற்பட்டது. அந்த வகையில் இலங்கை மீண்டெழ முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இலங்கையின் மோசமான வரிக் குறைப்பு மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்நியச் செலாவணி கையிருப்புகளை 70 சதவீதம் குறைத்தது. அங்கு மக்கள் மீதான சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பால், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது.
இதனால் மக்கள் பசியால் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்க டாலர் கையிருப்பு இல்லாத இலங்கையில், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கு மத்தியில் நாளொன்றுக்கு 13 மணி நேரங்கள் மின்வெட்டும் நிலவுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கின்றனர். மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின் விநியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொழும்பு நகரில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுகிறது. ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், நேற்றிரவு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள், இலங்கை அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டனர். அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றிய அவர்கள், ராணுவ வாகனத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் முற்றுகை போராட்டமாக நடந்த சம்பவம் பிறகு வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். தலைநகர் கொழும்புவில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நகரின் வடக்கு, தெற்கு, மற்றும் மத்திய நுகேகொட காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் அது தளர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.