சமீபத்தில் மறைந்த கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு நினைவுச்சின்னங்கள் எதுவும் அமைக்க வேண்டாம் என்று கியூப அதிபர் ரவுல் கேஸ்ட்ரோ பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கியூப நாட்டின் பிரதமராகவும், அதிபராகவும் சுமார் 50 ஆண்டு காலம் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. தொடர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2008ம் ஆண்டு, தன்னிடம் உள்ள ஆட்சியை தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்ப்படைத்தார்.
உடல் நிலை கடுமையாக மோசமடைந்ததை தொடர்ந்து பிடல் காஸ்ட்ரோ, கடந்த 25ம் தேதி இயற்கை மரணம் அடைந்தர். அவருடைய மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அனுதாபமும், அஞ்சலியும் தெரிவித்தனர்.
மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் விருப்பப்படி அவரது உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. அவரது உடலானது சான்டியாகோ நகரில் உள்ள சான்ட்டா எபிஜெனியா கல்லறையில் இன்று அடக்கம் செய்யபடுகிறது.
இந்நிலையில் பிடல் கேஸ்ட்ரோவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்ட பொது மக்கள் மத்தியில், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ பேசுகையில், 'மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் பெயரை அரசு நிறுவன கட்டிடங்கள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சூட்டக் கூடாது என்றும், மார்பளவு சிலை, முழு அளவு சிலை மற்றும் மணி மண்டபங்கள் அமைக்கப்படுவதை தனது வாழ்நாளில் பிடல் காஸ்ட்ரோ விரும்பியதில்லை, எனவே அவற்றையும் அமைக்க கூடாது என்றார்.
விரைவில் நடக்க உள்ள கியூபாவின் நாடாளுமன்ற கூட்டத்தின்போது இந்த உத்தரவுவை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்படும் எனவும் ரவுல் அவர் கூறினார்.