எல்லை விவகாரத்தில் விடாப்பிடியாக நின்ற ராஜ்நாத் சிங்..!! பகை வேண்டாம் என குப்புறப்படுத்த சீனா..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2020, 10:18 AM IST
Highlights

எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா முயற்சித்து வருகிறது, இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து  வருகின்றன என அவர் கூறினார்.
 

இந்தியாவுடனான எல்லையில் ஒட்டுமொத்த நிலைமையும் நிலையானதாகவும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது என சீனா தெரிவித்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையிலான பிரச்சினைகளை தீர்க்க இருநாடுகளும்  தொடர்பில்  இருந்து வருவதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்  ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார். இந்தியா  தனது பெருமைக்கு ஒருபோதும் பங்கம் நேரவிடாது என இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  கூறிய கருத்தை மேற்கோள்காட்டி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜாவோ லிஜியான், இரு நாட்டுக்கும் இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள உறுதியாக இருப்பதாக கூறினார். அதாவது இந்தியா-சீனா ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவங்களை அடுத்து கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாடுகளும் படைகளை குவித்து வருகிறது. இதனால் இரு நாட்டின் எல்லையிலும் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்தியா-சீனா இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து இந்திய பிரதமர் மோடி ,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், இந்திய பாதுகாப்பு படை தளபதி பிபின் ராவத், இராணுவத்தளபதி எம்.எம் நாரவனே மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து  அதிகாரிகளிடம் பல்வேறு தகவல்களை கேட்டறிந்த அவர்,  படைகளை எங்கெங்கு நிறுத்துவது என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். பின்னர் எல்லை விவகாரத்தில் ராணுவம் எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் தனது முழு ஆதரவு உள்ளது எனவும் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்,  எந்தச் சூழ்நிலையிலும் இந்தியாவின் பெருமைக்கு பங்கம் வர விடமாட்டோம் என்று நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன் எனக் கூறினார். மேலும், சில நேரங்களில் இந்திய-சீன எல்லையில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுவது சகஜமான ஒன்றுதான்,  இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது எனக் கூறினார்.  மேலும், எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா முயற்சித்து வருகிறது, இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து  வருகின்றன என அவர் கூறினார்.

இந்நிலையில் பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த சீனா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்,ஜாவோ லிஜியானிடம்,  இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறிய கருத்தை மேற்கோள்காட்டி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அவர், ஏற்கனவே இரு நாடுகளின் தலைவர்களுக்குமிடையில் ஏற்பட்ட  ஒருமித்த கருத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. தேசிய இறையாண்மை பாதுகாப்பு மற்றும் எல்லையில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதேபோல்,  எல்லைப்பகுதியில் ஒட்டுமொத்த நிலைமை, நிலையானதாகவும், கட்டுப்படுத்தக் கூடியதாகவும் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே  தடையற்ற தகவல்பரிமாற்றம் இருந்து வருகிறது. எனவே உரையாடல் மற்றும் ஆலோசனைகள் மூலம், சம்பந்தப்பட்ட பிரச்சினையைச் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என லிஜியான் தெரிவித்துள்ளார். அதே போல்,  எல்லை பதற்றத்தை சுமூகமான முறையில் தீர்க்க சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவாஸ்தவா கடந்த புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்த நிலையில் சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லிஜியான் இவ்வாறு கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கு மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என ட்ரம்ப் கூறியதை இருநாடுகளும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

 

click me!