பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: “இங்கிலாந்தின் டிரம்ப்” போரிஸ் ஜான்ஸன் மீண்டும் பிரதமராகிறார்...

By Selvanayagam PFirst Published Dec 13, 2019, 10:47 AM IST
Highlights

பிரிட்டனில் நடந்த நாடாளுமன்றத்த தேர்தலில் இங்கிலாந்தின் டிரம்ப் என்று அழைக்கக்கூடிய போரிஸ் ஜான்ஸன் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுவருவதால், மீண்டும் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதுபடியே கன்சர்வேட்டிவ் கட்சி ஏராளமான இடங்களைக் கைப்பற்றிமுன்னிலை பெற்றுள்ளது. அதேசமயம், தொழிலாளர் கட்சி, தன்னுடைய வலிமையான இடங்களில் கூட பின்னடவைச் சந்தித்துள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்றம் 650 இடங்களை கொண்டது.  இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ஒப்பந்தமான பிரெக்ஸிட்டை உடனடியாக நிறைவேற்றுவோம்’ என்ற கோஷத்துடன் இந்தத் தோ்தலை போரிஸ் ஜான்ஸன் எதிர்கொண்டார். 

பொது மருத்துவம் உள்ளிட்ட உள்நாட்டுப் பிரச்னைகளை முன்னிறுத்தி, எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவா் ஜெரிமி கோர்பின் இந்தத் தோ்தலை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்காக (பிரெக்ஸிட்) அந்த அமைப்புடன் பிரிட்டன் அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை, ஆளும் கன்சா்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாத நாடாளுமன்றம் தொடா்ந்து நிராகரித்து வந்தது.

இதனால், பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில், அதனை முன்கூட்டியே கலைத்துவிட்டு மீண்டும் தோ்தலை நடத்த பிரதமா் போரிஸ் ஜான்ஸன் முடிவெடுத்தார்.  

அதன்படியே தேர்தல் நடந்தது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள 650 இடங்களில் பெரும்பான்மைக்கு 322 இடங்கள் பெற்றாலே போதுமானது. ஆனால், தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சி 368 இடங்களில் வெற்றி பெறும் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. 

இதன்படி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 236 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 131 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  எஸ்என்பி கட்சி 39 இடங்களில் வென்றுள்ளது.இதனால் பெரும்பான்மையுடன் போரிஸ் ஜான்ஸன் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

click me!