BJP Subramanian Swamy : இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சே, பாஜக தலைவர் சுப்ரமணியன்சுவாமி சந்திப்பு!!

By Dhanalakshmi GFirst Published Sep 29, 2022, 7:42 PM IST
Highlights

இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சேவை கொழும்புவில் சுப்ரமணியன் சுவாமி சந்தித்து பேசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சேவை முன்னாள் எம்பி சுப்ரமணியன் சுவாமி இன்று சந்தித்து பேசினார். பதவியை இழந்த பின்னர் கோட்டபய ராஜபக்சேவை சந்தித்து பேசும் முதல் வெளிநாட்டுத் தலைவராக சுப்ரமணியன் சுவாமியின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அதிபராக இருந்த கோட்டபய ராஜபக்சே தவறான பொருளாதார கொள்கைகளால், தனது பதவியை இழக்க நேர்ந்தது. மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று நாடு நாடாக சென்று தங்கி இருந்த கோட்டபய ராஜபக்சே கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இலங்கை வந்து சேர்ந்தார். இன்னும் இவருக்கு எதிராக இலங்கை மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், இன்று கோட்டபய ராஜபக்சேவை சுப்ரமணியன் சுவாமி சந்தித்து பேசியுள்ளார்.

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை... எந்த நாட்டில் தெரியுமா?

இலங்கையில் புதன் கிழமை நடந்த ஜெனரல் சர் ஜான் கோடேலவாலா பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் தேசிய பாதுகாப்பு மாநாட்டில் சுப்ரமணியன் சுவாமி கலந்து கொண்டார். ராஜபக்சே குடும்பத்தினருக்கு நெருங்கிய நண்பராக சுப்ரமணியன் சுவாமி இருந்து வருகிறார். இதையொட்டி, நேற்று மாலை மகிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி பூஜையில் சுப்ரமணியன் சுவாமி கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இன்று கோட்டபய ராஜபக்சேவை சந்தித்துள்ளார்.

200 ஆண்டுகள் பழமையான கிரிஸ்டல் புல்லாங்குழல்… வாசித்து வரலாறு படைத்தார் லிசோ!!

கடந்த ஜூலை 13ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறி இருந்த கோட்டபய ராஜபக்சே சமீபத்தில்தான் இலங்கை திரும்பி இருந்தார். வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இருந்தது. இதையடுத்து, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து இறக்குமதிக்கும் மற்ற நாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. அந்நிய செலாவணி கையிருப்பும் குறைய, நாடு பெரியளவில் பணவீக்கத்திற்கு தள்ளப்பட்டு, பொருட்களின் விலை விண்ணை முட்டியது. இந்த நிலையில், மக்களின் போராட்டத்தையும், ஆவேசத்தையும் கட்டுப்படுத்த முடியாமல், கோட்டபய நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது நாடு திரும்பி இருக்கும் கோட்டபயாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று கோட்டபய ராஜபக்சேவை சந்தித்து இருக்கும் சுப்ரமணியன் சுவாமி, சனிக்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்த்தனாவை சந்திக்கிறார். சுப்ரமணியன் சுவாமியுடன் வழக்கறிஞர்கள் குழுவும் சென்றுள்ளது.

click me!