பாகிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவு.. 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு.. 25 பேரின் நிலை என்ன?

By Ramya sFirst Published May 28, 2023, 1:01 PM IST
Highlights

பாகிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில் 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 10 பேர் கொல்லப்பட்டனர், 25 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். மலைப் பகுதியில் உள்ள அஸ்டோர் மாவட்டத்தின் ஷண்டர் டாப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவில் மூன்று பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன, பின்னர் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று காவல்துறை கூறியது. இந்த விபத்தை உறுதி செய்த கில்கிட்-பால்டிஸ்தான் தலைமைச் செயலாளர் மொகிதீன் வானி இந்த விபத்தை உறுதி செய்து, பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : 40 முதலைகளால் கொல்லபட்ட முதியவர்! கம்போடியா பண்ணையில் நடந்த பயங்கரம்!

கில்கிட்-பால்டிஸ்தான் முதல்வர் காலித் குர்ஷித் கான் உயிர் இழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், கில்கிட் பால்டிஸ்தான் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் பிற அதிகாரிகள் உடனடியாக இந்த சம்பவம் குறித்து ஆராயுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். பனிச்சரிவில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பருவநிலை மாற்றத்தால் பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ட்வீட் செய்துள்ளார்.

மேலும் "பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளை இந்த தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பை முழு உலகமும் நிறைவேற்ற வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : வடகொரியாவில் 2 மாத கைக்குழந்தைக்கு ஆயுள் தண்டனை! வீட்டில் பைபிள் இருந்ததுதான் குற்றமாம்!

click me!