Rajalakshmi : தந்தை வண்டி இழுக்கும் தொழிலாளி.. தாய் வாகன ஓட்டுநர் - வறுமையை வென்று +2வில் சாதித்த ராஜலட்சுமி!

May 6, 2024, 8:04 PM IST

கோவை தெலுங்குப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பால்பாண்டியன் மற்றும் முருகேஸ்வரி தம்பதியினர். பால்பாண்டியன் சுமை வண்டி இழுக்கும் பணி செய்து வருகிறார். முருகேஸ்வரி லோடு வண்டி ஓட்டுனராக உள்ளார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் ஸ்ரீ ராஜலட்சுமி, ராஜவீதி பகுதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு உயிரியல் + கணிதவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார். 

இந்நிலையில் நடைபெற்று முடிந்த பொது தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றதோடு 600க்கு, 560 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார் ராஜலக்ஷ்மி. இதுகுறித்து மாணவி ஸ்ரீ ராஜலட்சுமி பேசும்போது, தான் படிக்க உதவிய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

மேலும் மருத்துவராக வேண்டுமென்பது எனது  கனவு என்றும், அதற்காக நீட் தேர்வு எழுதி உள்ளதாகவும், அதே சமயம் தங்கள் குடும்ப சூழலை கருதி மருத்துவப் படிப்புக்கு தேவையான உதவி செய்ய யாராவது முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார் ராஜலக்ஷ்மி. அதே போல் அப்பள்ளியில் Accounts பாட பிரிவில் படித்த மாணவி செளபாக்கியா 595 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் சிவில் சர்விஸ் மேற்கொள்ள இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.