தண்ணீர் திறக்க வில்லை என்றால் குடும்பத்தோடு சமையல் செய்து உண்ணும் போராட்டம்..! விவசாயிகள் அறிவிப்பு..

Aug 13, 2019, 3:25 PM IST

கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சனை மற்றும் விவசாய பயன் பாட்டிற்காக உடனடியாக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமராவதி ஆற்றுப்பாசன விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பின்னர் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் அவர்களிடம் உடனடியாக அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை மனுவும் அளித்தனர்.
அதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய விவசாயிகள் அமராவதி ஆற்றில் சுமார் 60,000 விவசாய குடும்பங்கள் தண்ணீர் திறந்து விடுவதால் பயன்பெறுவார்கள்.
மேலும் குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும் அணையில் நீர் இருப்பு இருந்தும் கடைமடை வரை குடிநீர் வந்ததை அரசு உறுதி செய்ய வேண்டும்.
எனவே நாளை தண்ணீர் திறக்காவிட்டால் நாளை மறுதினம் சுதந்திர தினத்தில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடும்பத்தோடு சமையல் செய்து உண்ணும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் திடீர் என 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு மனு அளிக்க வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.