கேரளா மாநிலத்தில் இருசக்கர வாகனமும், கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் தூக்கி வீசப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வளைவான பகுதியில் கனரக வாகனம் ஒன்று முறையான எச்சரிக்கை செய்யாமல் திடீரென திரும்ப முயன்றுள்ளது. அதே நேரத்தில் எதிர் திசையில் புல்லட்டுடன் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். திடீரென திரும்பிய வாகனத்தை பார்த்ததும் ஏற்பட்ட குழப்பத்தால் நொடி பொழுதில் கட்டுப்பாட்டை இழந்த புல்லட் கனரக வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மோதிய வேகத்தில் வாலிபர் அணிந்திருந்த தலைக்கவசவம் சுக்கு நூறாக உடைந்தது. இதனால் அவருக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. அதுபோல புல்லட்டுடன் அந்த வாலிபரும் சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
பலத்த காயமடைந்த வாலிபரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கனரக வாகன ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பதற வைக்கும் விபத்தின் பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.