Tata motors price hike : நாளை முதல் புதிய விலை - வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் டாடா மோட்டார்ஸ்

By manimegalai aFirst Published Jan 18, 2022, 4:23 PM IST
Highlights

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன மாடல்களின் விலை நாளை (ஜனவரி 19, 2022) முதல் உயர்த்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வின் படி இம்முறை டாடா கார்களின் விலை 0.9 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப மாறுபடும். 

வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சில வேரியண்ட்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. கார் மாடல்களுக்கான உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து வருவதை காரணம்காட்டி டாடா மோட்டார்ஸ் விலை உயர்வை அறிவித்து இருக்கிறது. 

"நிறுவனம் தொடர்ச்சியாக விலை உயர்வை எதிர்கொண்டு வருகிறது. கடுமையான விலை உயர்வு காரணமாக அதிகபட்ச செலவீனங்களை குறைந்தபட்ச விலை உயர்வு மூலம் எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கஸ்டமர்-ஃபர்ஸ்ட் திட்டத்தின்படி, ஜனவரி 18, 2022 வரை டாடாவின் புதிய கார்களை வாங்க முன்பதிவு செய்து இருப்பவர்களுக்கு விலை உயர்வு பொருந்தாது," என டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தி இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் டாடா மோட்டார்ஸ் தனது பயணிகள் வாகனங்கள் விலையை 0.8 சதவீதம் உயர்த்தியது. 

இதுதவிர ஜனவரி 1, 2022 முதல் அணைத்து வர்த்தக வாகனங்கள் விலையை 2.5 சதவீதம் உயர்த்தியது. டாடா மோட்டார்ஸ் மட்டுமின்றி மாருதி சுசுகி நிறுவனம் ஜனவரி 15, 2022 அன்று தனது வாகனங்கள் விலையை உயர்த்தியது. ஏற்கனவே பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களின் வாகனங்கள் விலையை உயர்த்தின. அனைத்து நிறுவனங்களும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதையே விலை உயர்வுக்கு காரணமாக தெரிவித்தன.

click me!