Twitter : இனி இவர்கள் மட்டும் தான் வாக்களிக்க முடியும்: எலான் மஸ்க் கெடுபிடி

By Raghupati RFirst Published Mar 28, 2023, 9:58 AM IST
Highlights

வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல், சரிபார்க்கப்பட்ட கணக்குகள் மட்டுமே டுவிட்டர் வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தில் வருவாயை பெருக்கும் வகையில் பல்வேறு கெடுபிடிகளை எலான் மஸ்க் விதித்து வருகிறார். ப்ளூ டிக் பெற வேண்டுமென்றால் கட்டணம், விளம்பரமின்றி பார்க்க வேண்டுமென்றால் கட்டணம் என எதற்கு எடுத்தாலும் ப்ளூ சந்தா பெற்றிருக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை எலான் மஸ்க் கொண்டு வருகிறார்.

அந்த வகையில், இனி டுவிட்டர் வாக்கெடுப்பில் சரிபார்க்கப்பட்ட  பயனர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று தடலாடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் டுவிட்டர் வாக்கெடுப்பில் சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெறும்.

இதுதான் AI போட்கள் வாக்களிப்பதை தடுப்பதற்கான ஒரே யதார்த்தமான வழி. இல்லையெனில், வாக்கெடுப்பில் நம்பிக்கைத் தன்மை என்பது இருக்காது என்று கூறியுள்ளார். பொதுவாக எலான் மஸ்க்கின் டுவிட்டர் அறிவிப்புகள் அனைத்தும் விந்தையாகவே பார்க்கப்படுகிறது. சில அறிவிப்புகள் டுவிட்டரின் கொள்கையாகவோ அம்சங்களாகவோ மாறாமல் அப்படியே நிலுவையில் உள்ளன. இதற்கு முன்பு கடந்த டுவிட்டர் நிறுவனம் ப்ளூ சந்தாதாரர்களுடன் விளம்பர வருவாயைப் பகிரப் போகிறது என்று எலான் மஸ்க் இருந்து அறிவித்திருந்தார்.

பிப்ரவரி மாதம் இந்த அறிவிப்பை வெளியிட்டார், ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகும் அவை செயல்பாட்டுக்கு வரவில்லை. அதே போல், மார்ச் 5 ஆம் தேதிக்குள் டுவிட்டர் நிறுவனத்தின் அல்காரிதத்தை ஓப்பன் சோர்ஸ் செய்வதாகவும் அவர் உறுதியளித்தார், அதுவும் நடக்கவில்லை. 

இருப்பினும் ப்ளூ டிக் சம்பந்தமான அறிவிப்புகள் உடனுக்குடன் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, டுவிட்டருக்கு லாபம் கிடைக்கின்ற கட்டண சந்தா, கட்டண சந்தா திட்டங்கள் மட்டும் முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வருகிறது. அதே போலவே தற்போது வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற வேண்டும் என்று எலான் மஸ்க் நிர்பந்தம் விதிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

click me!