நான்கு ஆண்டுகளுக்கு பின் வளர்ச்சி - மீண்டு வரும் ஸ்மார்ட்போன் மார்கெட்

By Kevin KaarkiFirst Published Jan 28, 2022, 2:16 PM IST
Highlights

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை நான்கு ஆண்டுகளுக்கு பின் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் வருடாந்திர வினியோகம் கடந்த ஆண்டு மட்டும் 139  கோடி யூனிட்களாக இருந்தது. 2017 ஆம் ஆண்டுக்கு பின் ஸ்மார்ட்போன் சந்தையில் நான்கு சதவீதம் வருடாந்திர வளர்ச்சி பதிவாகி இருக்கிறது.

எனினும், ஸ்மார்ட்போன் விற்பனை பெருந்தொற்று துவங்கும் முன் இருந்ததை விட குறைவாகவே இருக்கிறது. முன்னதாக 2017 ஆம் ஆண்டு சர்வதேச ஸ்மார்ட்போன் வினியோகம் 155 கோடிகளாக அதிகரித்தது. இன்று வரை இந்த சாதனை முறியடிக்கப்படாமலேயே இருக்கிறது.

பெருந்தொற்று காலக்கட்டத்தில் வடஅமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனை சூடுப்பிடித்தது. அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன்கள் கணிசமான விற்பனையை பதிவு செய்தன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அதிக மாற்று மாடல்கள், நிதி சலுகைகள் அறிவிக்கப்பட்டது உள்ளிட்டவை காரணங்களாக இருந்தன.

ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச வினியோகம் வருடாந்திர அடிப்படையில் 18 சதவீதம் வளர்ச்சி பெற்று 2021 வாக்கில் 23.7 கோடி யூனிட்களாக அதிகரித்தது. ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக இது சாத்தியமானது. இதுதவிர சீன சந்தையில் ஆப்பிள் நிறுவனம் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுத்தது. இதுதவிர சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் மீண்டும் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. 

சியோமியின் சர்வதேச ஸ்மார்ட்போன்கள் வினியோகம் 2021 ஆண்டு 19 கோடிகளாக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டை விட 31 சதவீதம் அதிகம் ஆகும். ஆண்டின் முதல் அரையாண்டில் சியோமி அசுர வளர்ச்சியை பதிவு செய்தாலும், அதன் பின் வினியோகத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக சியோமி சீன சந்தையில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

click me!