BSNL 4G: சீக்கிரமே பி.எஸ்.என்.எல். 4ஜி வெளியீடு - எல்லாரும் ரெடியா இருங்க...!

By Kevin KaarkiFirst Published Mar 25, 2022, 5:18 PM IST
Highlights

BSNL 4G: பி.எஸ்.என்.எல். 4ஜி வெளியீடு பற்றி பதில் அளிக்கும் போது, இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

பி.எஸ்.என்.எல். 4ஜி சேவைகள் விரைவில் துவங்கப்பட இருப்பதாக தகவல் பரிமாற்ற துறை அமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கேள்வி நிறத்தின் இந்த தகவலை அவர் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெலிகாம் சந்தையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மற்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட மிகவும் திணறி வருகிறது. 

இதன் காரணமாக பி.எஸ்.என்.எல். வருவாய் இழப்பு, சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை எம்.டி.என்.எல். உடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கேள்வி நேரத்தின் போது அமைச்சர், இந்தியாவில் விரைவில் 5ஜி சேவைகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என தெரிவித்தார்.

பி.எஸ்.என்.எல். 4ஜி:

இந்திய சந்தையில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவைகள் விரைவில், அதாவது இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட இருக்கிறது. மற்ற நிறுவனங்களை போன்று  பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் நாடு முழுக்க 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கவில்லை. 2020 வாக்கில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பின். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கான 4ஜி டெண்டர்களை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்தது. 

இந்திய டெலிகாம் சந்தையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 10.15 சதவீத பங்குகளுடன் மற்ற தனியார் டெலிபோன் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் போட்டியிட முடிகிறது என அமைச்சர் சவுகான் கடந்த மாத கேள்வி நேரத்தின் போது பதில் அளித்து இருந்தார். மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வருவாய் இழப்பு 2019-20-இல் ரூ. 15 ஆயிரத்து 500 கோடியாக இருந்தது. எனினும், 2020-21 ஆண்டுக்கான வருவாய் இழப்பு ரூ. 7 ஆயிரத்து 441 கோடியாக சரிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்கள் எண்ணிக்கை 11.43 கோடியாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 11 லட்சத்து 75 ஆயிரம் பேர் புதிதாக பி.எஸ்.என்.எல். சேவையில் இணைந்தனர். 

5ஜி சேவை:

பி.எஸ்.என்.எல். 4ஜி வெளியீடு பற்றி பதில் அளிக்கும் போது, இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவை வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும் இந்தியாவில் 98 சதவீதம் மொபைல் கனெக்டிவிட்டி கவரேஜ் இருப்பதாகவும் அவர் தெரிவ்த்தார். 

ஏர்டெல், ஜியோ மற்றும் வி (வோடபோன் ஐடியா) போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை சோதனை செய்து வருகின்றன. மேலும் அடுத்த தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பத்தை வெளியிட இந்த நிறுவனங்கள் டெலிகாம் கியர் உற்பத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. 

click me!