எச்சரிக்கை.. AI வாய்ஸ் குளோனிங் மூலம் பணத்தை திருடும் கும்பல்.. மோசடியில் இருந்து எப்படி தப்பிப்பது?

By Ramya sFirst Published Apr 27, 2024, 2:29 PM IST
Highlights

 AI வாய்ஸ் குளோனிங் மூலம் பணத்தை திருடும் நூதன மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் காவல்துறை எச்சரித்துள்ளது.

தொழில்நுட்பம் எந்தளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளதோ இணைய குற்றங்களும் அதே அளவு அதிகரித்துள்ளன. ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. சைபர் கிரிமினல் பல்வேறு நூதன வழிகளில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் போலவே நம்பகமான நபர்களின் குரல்களை குளோனிங் செய்து, அவசர தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு அதன் மூலம் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். அதாவது AI தொழில்நுட்பம் மூலம் குடும்ப உறுப்பினர்களை போலவே பேசி, அவர்களை .ஏமாற்றி வருகின்றனர்.

AI குரல் குளோனிங் மோசடி : எப்படி நிகழ்கிறது?

சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபி திரு.சஞ்சய்குமார் ஐபிஎஸ் இதுகுறித்து பேசிய போது “ தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளும் இவர்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் போன்ற பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த நபரை போல் காட்டிக்கொண்டு ஏதேனும் அவசரநிலை அல்லது அச்சுறுத்தல் என்று கூறி அவசர நிதி உதவி தேவைப்படுவதாக கூறலாம்.

உடனடி உதவி தேவைப்படும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகக் கூறும் அவர்கள் அழுதுகொண்டே பேசுவதையோ அல்லது கெஞ்சும் தொனியிலோ பேசலாம். இந்த சைபர் குற்றவாளிகள் ஆள்மாறாட்டம் செய்யும் நபரின் குரலை குளோன் செய்ய அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் ஆள்மாறாட்டம் செய்யும் நபரின் குரல் மாதிரியை அவர்களின் சமூக ஊடக இடுகை/வீடியோக்கள் அல்லது தொலைபேசி மூலம் தவறான அழைப்பாகப் பேசுவதன் மூலம் பெறுகிறார்கள்.

இந்தத் தொழில்நுட்பம், பாதிக்கப்பட்டவரின் நம்பகமான தொடர்பின் குரல், உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சி நுணுக்கங்களை நம்பத்தகுந்த வகையில் பிரதிபலிக்க அனுமதிக்கிறது. மோசடி நபர், பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக பணத்தை மாற்றுமாறு கோருகிறார். பரிவர்த்தனையை விரைவுபடுத்த யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) போன்ற வேகமான மற்றும் வசதியான கட்டண முறைகளைப் பயன்படுத்துவதை பரிந்துரைக்கின்றனர். 

அக்கறையாலும், நேசிப்பவருக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வத்தாலும் பாதிக்கப்பட்டவர், அழைப்பாளரின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் மோசடி செய்பவரின் கோரிக்கைகளுக்கு இணங்கலாம். இந்த பணப்பரிமாற்றம் முடிந்த உடன், தங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரை தொடர்பு கொள்ள முயலும் போது அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணரலாம்,” என்று தெரிவித்தார்.

AI குரல் குளோனிங் மோசடியில் இருந்து எப்படி தப்பிப்பது?

மேலும் இந்த மோசடியில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்தும் அவர் பேசி உள்ளார். இதுகுறித்து பேசிய போது “ உங்களை அழைக்கும் நபரின் அடையாளத்தை எப்போதும் சரிபார்க்கவும், குறிப்பாக அவர்கள் அவசர நிதி உதவி கோரினால்.
விசாரணைக் கேள்விகளைக் கேளுங்கள். ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த, அறியப்பட்ட, சரிபார்க்கப்பட்ட எண்ணின் மூலம் அழைக்கப்படும் அழைப்பாளரைத் தொடர்புகொள்ளவும்.

குரல் குளோனிங் மோசடி உட்பட பொதுவான மோசடிகளைப் பற்றி தொடர்ந்து அறிந்திருங்கள். எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காண கற்றுக்கொள்ளுங்கள். பணத்திற்கான எதிர்பாராத கோரிக்கைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். முக்கியமான உரையாடல்கள் அல்லது பரிவர்த்தனைகளில் ஈடுபடும் முன் அழைப்பாளர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க, மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் பயன்பாடுகள் அல்லது வீடியோ அழைப்புகள் போன்ற பாதுகாப்பான தகவல்தொடர்பு சேனல்களைப் பயன்படுத்தவும்.

தெரியாத எண்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளைப் பெறும்போது எச்சரிக்கையாக இருங்கள், குறிப்பாக அவை தனிப்பட்ட அல்லது நிதித் தகவலுக்கான கோரிக்கைகளை உள்ளடக்கியிருந்தால். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள் மற்றும் தகவல்தொடர்புகளின் நியாயத்தன்மையை சரிபார்க்க தயங்காதீர்கள். நீங்கள் இதேபோன்ற மோசடி நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலை சந்தித்தால், சைபர் கிரைம் டோல்ஃப்ரீ ஹெல்ப்லைன் எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது http://cybercrime.gov.in இல் புகாரைப் பதிவு செய்யவும்.” என்று தெரிவித்தார்.

click me!