காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்…

First Published Nov 6, 2017, 8:13 AM IST
Highlights
Youth attempted suicide for love failure


சிவகங்கை

சிவகங்கையில் ஒருதலையாக காதலித்த பெண் தனது காதலை ஏற்க மறுத்ததால் விரக்தியடைந்த இளைஞர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள ஆண்டூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன் ஜோஸ்வா (22). இவர் ஜே.சி.பி. எந்திர ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

ஜோஸ்வா, அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை அந்த பெண்ணிடம் வெளிபடுத்தியபோது அந்த பெண் ஜோஸ்வாவின் காதலை ஏற்கவில்லையாம்.

காதலை ஏற்காததால் விரக்தியால் ஜோஸ்வா நேற்று அதே ஊரில் உள்ள 150 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிச்சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைக் கண்டு அங்கு திரண்ட அப்பகுதி கிராம மக்கள் அவரை இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால், காதலிக்கும் பெண்ணை அழைத்து வந்தால் மட்டுமே இறங்குவேன் என்று தொடர்ந்து ஜோஷ்வா மிரட்டல் விடுத்துள்ளார்.

உடனே கிராம மக்கள் காளையார்கோவில் காவலாளர்கள் மற்றும் சிவகங்கை தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான படையினர் ஆண்டூரணிக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் காவலாளர்களும், தீயணைப்பு படையினரும் ஜோஷ்வாவிடம் கீழே இறங்கி வருமாறு ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தினர். ஆனால் அவர் இறங்கவில்லை.

இதனையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் பாண்டியராஜன் மற்றும் சரவணக்குமார் ஆகியோர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஜோஷ்வாவை பத்திரமாக மீட்டனர்.

இந்த மீட்பு பணி மட்டும் சுமார் 2 மணி நேரம் நடைப்பெற்றது. பின்னர் மீட்கப்பட்ட ஜோஸ்வா மீது காளையார்கோவில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!