நிம்மதியா வாழ விடுமாறு செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி…

Asianet News Tamil  
Published : Jun 14, 2017, 06:24 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
நிம்மதியா வாழ விடுமாறு செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி…

சுருக்கம்

Youth attempt suicide let him live a life peacefully

திருப்பூர்

திருப்பூரில் திருந்தி வாழ நினைப்பவரை காவலாளர்கள் பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்துவதால் 40 அடி செல்போன் கோபுரத்தில் ஏறிய இளைஞர் நிம்மதியா வாழ விடுங்க என்று பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

திருப்பூர் – காங்கேயம் சாலை புதூர் பிரதான சாலை புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (26). இவர் மீது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் வழிப்பறி, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்டப் பல்வேறு குற்ற வழக்குகள் போடப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி, அரியலூர் காவல் நிலையங்களிலும் இவர்மீது குற்ற வழக்குகள் இருக்கிறதாம். அதுமட்டுமன்றி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு உள்ளாராம்.

இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் புதுக்காடு பகுதியில் உள்ள 40 அடி உயர செல்போன் கோபுரத்தில் முரளி திடீரென்று ஏறினார்.

சமீபத்தில் காவலாளர்கள் தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், திருந்தி வாழ நினைக்கும் தன்னை காவலாளார்கள் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்வதாகவும் கூறினார். என்னை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். என்று மனம் உடைந்து தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் முரளி கூறினார்.

இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வருமாறு கூறினர். ஆனால் முரளி இறங்கவில்லை.

இந்தச் சம்பவம் பற்றி தகவகலறிந்ததும் முரளியின் பெற்றோர் அங்கு வந்தனர். அவர்கள் செல்போன் மூலமாக முரளியிடம் பேசி கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனாலும் முரளி கேட்கவில்லை.

நேரம் செல்லச் செல்ல அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. திருப்பூர் தெற்கு காவல் உதவி ஆணையர் மணி, தெற்கு காவல் ஆய்வாளர் நெல்சன், தெற்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வந்து முரளியிடம் செல்போன் மூலமாக பேசினர்.

சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தில் ஏற முயன்றனர். அப்போது முரளி தான் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து தலை மற்றும் உடலில் ஊற்றினார். ‘மேலே யாராவது ஏறி வந்தால் தீக்குளிப்பேன்’ என்று மிரட்டல் விடுத்தார்.

பின்னர் தெற்கு தாசில்தார், உதவி ஆணையர் ஆகியோர் செல்போன் மூலமாக முரளியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வருமாறும், காவல் நிலையங்களில் உள்ள வழக்குகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து முரளி கீழே இறங்கி வர சம்மதித்தார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முரளியை கோபுரத்தின் மேலே இருக்கும்படி தெரிவித்து விட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து ஏறிச்சென்று கயிறு கட்டி முரளியை மாலை 6 மணி அளவில் கீழே இறக்கி கொண்டு வந்தனர்.

பின்னர் அவசர ஊர்தி கொண்டு வரப்பட்டு முரளியை ஏற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

Union Budget 2026: தேர்தல் நேரத்திலும் தமிழகம் கண்ணுக்கு தெரியலையா? பெரிய ஏமாற்றம்.. கொந்தளித்த ஸ்டாலின்
ICU-வில் எச்.ராஜா.. மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த ஸ்டாலின், உதயநிதி.. பாஜகவினர் நெகிழ்ச்சி!