
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்த இளைஞரை, குழந்தையை கடத்த முயன்றதாக நினைத்து மக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூர்பாளையம் கிராமத்தில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்துள்ளார்.
இதனைக் கண்ட அந்தப் பகுதியில் இருந்தவர்கள் குழந்தைகளை கடத்துவதற்காக பிஸ்கெட் கொடுக்கிறார் என்று நினைத்து அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் களம்பூர் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தஞ்சாவூர் சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர், மனநிலை பாதிக்கப்பட்டவர்போல காணப்பட்டார். மக்கள் தாக்கியதில் காயமடைந்த அவருக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து காவலர் ஒருவர், அவரை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார்.