திருச்சி
திருச்சியில், அரசு வேலைப் பார்க்கும் மாப்பிள்ளை கிடைக்காததால் இளம்பெண் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், பாலக்கரை கீழகல்லுக்கார தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகள் சிவசங்கரி (32). பட்டதாரியான இவருக்கு திருமணமாகவில்லை.
வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ள நிலையில் சிவசங்கரி நேற்று முன்தினம் இரவு வீட்டின் 2-வது மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்குப் போட்டுத் தொங்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரைக் காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவசங்கரி ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாலக்கரை காவலாளார்கள் சிவசங்கரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாலக்கரை காவலாளர்கள் வழக்குப்பதிந்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட சிவசங்கரிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்புதான் திருமணத்திற்காக அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அதற்கு சிவசங்கரி, "அந்த மாப்பிள்ளை வேண்டாம், அரசாங்கத்தில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்" என்று தெரிந்துள்ளது.
அரசு வேலைப் பார்க்கும் மாப்பிள்ளை கிடைக்காததால்தான் சிவசங்கரி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா இருக்கிறதா? என்று காவலாளர்கள் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.