இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் உணர்வு: செந்தில்குமார் எம்.பி.யை விளாசிய அண்ணாமலை!

By Manikanda PrabuFirst Published Dec 6, 2023, 4:50 PM IST
Highlights

இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்வே திமுக எம்.பி பேசிய வார்த்தைகள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்

நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார், “கோ மூத்திர மாநிலங்கள் (பசு கோமிய மாநிலங்கள்) என்று நாம் பொதுவாக அழைக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. இதுவே பாஜகவின் பலம். ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் நடைபெறும் தேர்தலில் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிவதில்லை.” என்றார்.

செந்தில் குமார் எம்.பி.யின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தமது பேச்சுக்கு வருத்தமும் தெரிவித்துள்ள திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் மன்னிப்பும் கேட்டுள்ளார். “நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” என தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்வே திமுக எம்.ப. செந்தில்குமார் பேசிய வார்த்தைகள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். சென்னை மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர், “திமுக எம்.பி. கூறிய வார்த்தைகள், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்விலிருந்து வந்தது. அது அவர்களின் தவறான சித்தாந்தத்தின் ஆழமான உணர்விலிருந்து வந்தது.” என தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் மீட்பு பணி: தமிழக அரசுடன் கைகோர்க்க வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு!

முன்னதாக, பசு கோமிய மாநிலங்கள் என செந்தில்குமார் எம்.பி., குறிப்பிட்ட வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டன என்பது கவனிக்கத்தக்கது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், தெலங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸும், மிசோரமில் ஜோரம்  மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளது.

click me!