பெண்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் - ஆட்சியர் அட்வைஸ்...

First Published Dec 14, 2017, 9:30 AM IST
Highlights
Women should work in construction and raise livelihood - collector Advise


திருவள்ளூர்

தனிநபர் இல்ல கழிவறைகள் கட்டுதல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இதர கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று திருவள்ளூர் ஆட்சியர் சுந்தவல்லி அறிவுறுத்தியுள்ளார்.


தனிநபர் இல்ல கழிவறைகள் அமைத்தல் தொடர்பாக மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கட்டுமான பயிற்சி நடந்தது. இதை கலெக்டர் சுந்தரவல்லி தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தனிநபர் இல்ல கழிவறைகள் அமைத்தல் தொடர்பாக மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு மாவட்ட அளவிலான கட்டுமான பயிற்சி நடைபெற்றது.

திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த இந்த பயிற்சியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தலைமைத் தாங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது ஆட்சியர் சுந்தவல்லி கூறியது: "திருவள்ளூர் மாவட்டத்தை திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற சுகாதார முன்னோடி மாவட்டமாக அமைய வேண்டும் என்பதற்காக தூய்மை பாரத இயக்கம் சார்பில் 526 ஊராட்சிகளிலும் தனிநபர் இல்ல கழிவறைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 14 ஊராட்சி ஒன்றியங்களில் 321 ஊராட்சிகள் திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற பிப்ரவரி மாதம் 2018–க்குள் 205 ஊராட்சிகள் திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட உள்ளது.

இத்தகைய தனிநபர் இல்ல கழிவறைகள் இந்த மாவட்டத்தில் அமைக்கும் பணியில் பெண்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வட்டத்திலும் கட்டுமானப்பணியில் ஈடுபட ஆர்வமுள்ள பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான கட்டுமான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி பெறும் பெண்கள் தங்களது கிராம ஊராட்சிகளில் தனிநபர் இல்ல கழிவறைகள் கட்டுதல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இதர கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

click me!