
திண்டுக்கல்
திண்டுக்கல்லில், முறையான குடிநீர் விநியோகம் செய்யபப்படவில்லை என்ற புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் சினம் கொண்ட மக்கள் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உள்பட்டது மாலப்பட்டி காமாட்சிநகர் பகுதி. இந்த பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் பரவலாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சினம் கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வெற்றுக் குடங்களுடன் நேற்று சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டம் நடத்திய பொதுமக்களிடம், “முறையான குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளிடம் பேசுகிறோம்” என்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்தப் பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.