இரவு நேரங்களில் சுற்றித் திரியும் காட்டு யானைகள்; வெளியில் செல்லவே பயப்படும் மக்கள்...

First Published Jun 23, 2018, 1:45 PM IST
Highlights
Wild elephants roaming around at night People afraid to go out


திண்டுக்கல்

திண்டுக்கல்லில் நீர்த்தேக்க பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் காட்டு யானைகளால் வெளியில் நடமாடவே மக்களை பயப்படுகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம், பழனி வனப்பகுதியில் வசிக்கும் யானை, கடமான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  

வனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் சில நேரங்களில் உணவு, தண்ணீருக்காக பாலாறு, பொருந்தலாறு அணை, வரதமாநதி அணைப் பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம். இவை குடியிருப்பு பகுதிக்குள் புகாமல் தடுப்பதும் வேட்டை தடுப்பு காவலர்கள், வனப் பாதுகாவலர்கள் பணியே. 

இந்த நிலையில், பழனியை அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள கோடைகால நீர்த் தேக்கம் அருகே கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள், "அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கோடைகால நீர்த்தேக்கம் பகுதிக்கு மூன்று யானைகள் வருகின்றன. இவை நீர்த் தேக்கத்தில் தண்ணீர் குடித்துவிட்டு அருகே வளர்ந்துள்ள மரங்களை சேதப்படுத்துகின்றன. மேலும், இந்த யானைகள் கொடைக்கானல் சாலைக்கு வந்து பலமணி நேரம் நிற்பதால் இரவு நேரத்தில் வெளியில் செல்லவே அச்சப்படுகிறோம்" என்று கூறினர்.

"யானைகள் தண்ணீர் குடிப்பதற்காகவே வருகின்றன. அவை குடியிருப்பு பகுதிக்குள் புகாமல் அங்கு ரோந்து பணியில் இருக்கும் வனத்துறையினர் தடுத்து மீண்டும் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டுகின்றனர். எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்" என்று இதுகுறித்து வனச்சரகர் கணேஷ்ராம் கூறினார்.

click me!