சுத்தியலால் அடித்து கணவன் கொலை - முதல் மனைவியை பார்த்ததால் ஒரே போடாய் போட்ட 2வது மனைவி

First Published Mar 18, 2017, 12:18 PM IST
Highlights
wife murdered husband


தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், ஆர்.எம்.கே நகர், லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் கணேஷ் (40). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. 

இவரது முதல் மனைவி பேபி. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேபி, கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றார். தற்போது அவர், விழுப்புரத்தில் குழந்தைகளுடன் வசிக்கிறார்.

இதையடுத்து கணேஷ், சத்யா (32) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் பெருங்களத்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளான்.

கடந்த வாரம் கணேஷ், விழுப்புரத்தில் வசிக்கும் முதல் மனைவி பேபியை பார்க்க சென்றார். அங்கு ஒரு நாள் தங்கிய அவர், மீண்டும் சென்னை திரும்பினார். இதை அறிந்த சத்யா, கணவனுடன் தகராறு செய்தார். இந்த சண்டை தினமும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு கணேஷ் வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சத்யா, மீண்டும் கணவனிடம், முதல் மனைவியை பார்த்துவிட்டு வந்தது பற்றி பேசி தகராறு செய்தார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் பதறியடித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிய சத்யா, அக்கம் பக்கத்தினரை அழைத்து, போதையில் கணவன் கீழே விழுந்துவிட்டார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என கூறினார். 

உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த மருத்துவ குழுவினர், கணேஷை பரிசோதனை செய்தனர். அதில், அவர் இறந்து இருப்பது தெரிந்தது.

தகவலறிந்து பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, சத்யா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் துருவி துருவி விசாரித்தனர்.

அதில், முதல் மனைவியை, கடந்த வாரம் கணேஷ் பார்த்துவிட்டு வந்தார். இதனால், இனி எனக்கும், எனது மகனுக்கும் பாதிப்பு ஏற்படும் என பயந்தேன். இதுபோல் அவர் மீண்டும் முதல் மனைவியை தொடர்ந்து பார்த்தால், எங்களை விட்டு பிரிந்து விடுவார் என்ற காரணத்தால், அவருடன் தினமும் சண்டை போட்டேன்.

சம்பவம் நடந்தபோது, அதேபோல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது, ஆமாம் அவ என் பொண்டாட்டிதான். நான் அங்கேதான் போவேன் என திமிராக பேசினார். இதனால், ஆத்திரமடைந்த நான், வீட்டில் 

இருந்த சுத்தியலால், கணேஷின் தலையில் வேகமாக அடித்தேன். போதையில் இருந்த கணேஷ் சுருண்டு கீழே விழுந்தார். மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு ஓடியது. மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார்.

இதனால், அக்கம் பக்கத்தினரிடம் கூறினேன். ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள், பரிசோதனை செய்து, கணேஷ் இறந்துவிட்டதாக கூறினார்கள். இதில், நான் சிக்க மாட்டேன் என நினைத்தேன்.

ஆனால், போலீசாரின் விசாரணையில் நானே சிக்கி கொண்டேன் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.

இதையடுத்து போலீசார், சத்யாவை கைது செய்தனர். இச்சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!