அடுத்த டிஜிபி யார் என்பதை தேர்வு செய்ய மத்திய தேர்வாணையம் இன்று கூடுகிறது. அதில் கலந்து கொள்ள தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாத்ன் டெல்லி சென்றுள்ளார்.
தற்போது, பொறுப்பு டிஜிபியாக இருக்கும் டி..கே.ராஜேந்திரன் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார் என்ற விவாதம், கடந்த ஒரு வாரமாக உலா வருகிறது.
தற்போதுள்ள டிஜிபி டி.கே.ராஜேந்திரன், எடப்பாடி அரசுக்கு நெருக்கமானவர் என்ற நிலையில், 3 மாத பணி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளி வந்த நிலையில், பான் குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்களின் பெயர் பட்டியலில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, வழக்கமாக கடித போக்குவரத்து முறையில் மட்டுமே நடத்தப்படும் டிஜிபி தேர்வு பான் குட்கா விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், தலைமை செயலாளர்கள் டெல்லிக்கு அழைக்கும் அளவுக்கு வலுபெற்றுள்ளது.
புதிய டிஜிபி பட்டியலில் 1980ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான நேபாள் பாதுகாப்பு படை அதிகாரியாக இருக்கும் அர்ச்சனா ராமசுந்தரமும், 1983ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ராதாகிருஷ்ணன், 1984ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான மின்வாரிய விஜிலன்ஸ் டிஜிபி கே.பி.மகேந்திரன், அதே ஆண்டு பேட்ஜ் அதிகாரிகளான தீயணைப்பு துறை டிஜிபி ஜார்ஜ், தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.
தமிழக அரசு அளிக்கும் பட்டியலில் இருந்து 3 பேரை மத்திய அரசு அளிக்கும். அந்த 3 பேரில், ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும்.
இதில், டி.கே.ராஜேந்திரனும், ஜார்ஜும் பிரச்சனையில் சிக்கியுள்ளதால், அவர்களது பெயர் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படாது. இதையொட்டி சீனியாரிட்டி அடிப்படையில் முதல் 3 இடங்களில் அர்ச்சனா ராமசுந்தரம், ராதாகிருஷ்ணன், கே.பி.மகேந்திரன் ஆகியோர் உள்ளனர். இதில் கே.பி.மகேந்திரனுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யப்படும் ஐபிஎஸ் அதிகாரிகள் 2 ஆண்டுகள் செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.