
அரசு பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் சைவ உணவு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று நிபந்தனை நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக ஓட்டலுக்கான டெண்டர் விண்ணப்பத்தில் சைவ உணவே தயாரிக்க வேண்டும் என இருந்ததால் எதிர்ப்பு கிளம்பியது.சில தனியார் உணவகங்களில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பதாக புகார் எழுந்ததையடுத்து, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின்பேரில், பயணவழி உணவகங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் பல உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்பட்டது கண்டறியப்பட்டதாகவும் இதனையடுத்து அரசுப் பேருந்துகள் இனி லைசன்ஸ் பெற்ற சைவ உணவகங்களில் மட்டுமே நின்று செல்லலாம் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சைவ உணவுகள் மட்டுமே.. எழுந்த சர்ச்சை:
முன்னதாக, பயணவழி உணவகங்களுக்கான டெண்டரில் இனி சைவ உணவகங்கள் மட்டுமே பங்குபெற முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது சர்ச்சையான நிலையில், நேற்று வெளியான டெண்டரில் இருந்த 'சைவ உணவு' என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், டெண்டரில் பங்குபெற உணவகங்களில் சிசிடிவி கேமரா வசதி இருக்க வேண்டும், சுத்தமான சமையலறை இருக்க வேண்டும், கணினி பில்லிங் வசதி இருக்க வேண்டும், சுத்தமான கழிவறைகள் இருக்க வேண்டும், விலை சரியானதாக இருக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் விதித்துள்ளது.
இதுக்குறித்து வெளியான அறிவிப்பில், உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். உணவகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்படி பராமரிக்க வேண்டும். பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
நிபந்தனைகள்:
மேலும் பயணிகளுக்கு கழிவறையில் தண்ணீர் வசதி எப்பொழுதும் இருக்க வேண்டும். கழிவறையை கம்ப்ரஷர் மூலம் தான் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், பயோ கழிவறை இருக்க வேண்டும். உணவகத்தின் அமைப்பு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நின்று செல்வதற்கு போதுமான இடவசதியுடன் இருக்க வேண்டும். மேலும், பேருந்து நிறுத்தம் செய்யும் இடம் கான்க்ரீட் தளமாக அல்லது பேவர் பிளாக் போட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.