நாய்க்கு கிடைக்குற ஓய்வூதியம் கூட எங்களுக்கு கிடைக்கல - நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு ஓய்வூதியர்கள் போராட்டம்...

First Published Nov 28, 2017, 6:27 AM IST
Highlights
We do not even get pensions for dogs - pensioners struggle with the name on the forehead ...


சிவகங்கை

காவல்துறை மோப்பநாய் ஓய்வு பெற்றதும் அதற்கு ஓய்வூதியமாக ரூ.6000 வழங்கப்படுகிறது. அதுக் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த ஓய்வுபெற்ற ஊழியர்கள் சங்கத்தினர் அனைவரும் தமிழக அரசு தங்களை ஏமாற்றுவதாக கூறி அதனைக் கண்டிக்கும் வகையில் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பிச்சை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சீமைச்சாமி, தமயந்தி, சாமித்துரை, கண்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் சங்கரநாராயணன் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

இந்த போராட்டத்தில், "ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும்,

அரசு ஊழியர்களுக்கு இணையாக குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை வழங்க வேண்டும்" உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டம் குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் சங்கரநாராணயன், "காவல்துறை மோப்பநாய் ஓய்வு பெற்றதும் அதற்கு ஓய்வூதியமாக ரூ.6000 வழங்கப்படுகிறது. அதுக்கூட எங்களுக்கு வழங்கப்படவில்லை.

எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்று போராட்டத்திற்கு வலுசேர்த்தனர்.

click me!