சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றிதழ்களை, சார் பதிவாளர் அலுவலகங்களில் பெறும் நடைமுறை, வரும் 2 முதல் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதில் வில்லங்க சான்றிதழ்களை இனி ஆன் லைன் மூலம் மட்டுமே வாங்க முடியும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிதாக வீடு, மனை போன்ற அசையாச் சொத்துகள் வாங்குவோர், விற்போர், முந்தைய பரிமாற்ற விபரங்களை தெரிந்துக் கொள்ள, வில்லங்கச் சான்றிதழ் பெறுவது அவசியம். வில்லங்க விபரங்களை, பதிவுத்துறை இணையதளத்தில், இலவசமாக தெரிந்துக் கொள்ளும் வசதி உள்ளது.
ஆனால், பத்திரப்பதிவு, வங்கிகள் மற்றும் நீதிமன்ற பரிசீலனைக்கு, நேரடியாக விண்ணப்பித்து பெறப்படும் வில்லங்கச் சான்றிதழ்களே ஏற்கப்படுகின்றன.
இந்நிலையில், பதிவுத் துறை பணிகள் அனைத்தும், கடந்த 10 ஆம் தேதி முதல் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. எனவே, ஆன்லைன் வழியே, கட்டணம் செலுத்தி, கியூ.ஆர்., குறியீட்டுடன், வில்லங்கச் சான்று மற்றும் பிரதி ஆவணங்களை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது..
இதையடுத்து நேரடியாக விண்ணப்பித்து, சார் பதிவாளர் அலுவலகங்களில், வில்லங்கச் சான்றிதழ்களை பெறும் நடைமுறை கைவிடப்படுகிறது. டிஜிட்டல் மயமாகாத காலத்துக்கான வில்லங்கச் சான்றிதழுக்கு மட்டும், நேரில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.