Vijay Political Surgical Strike: விஜயின் அரசியல் சர்ஜிகல் ஸ்டிரைக்! டிரான்ஸ்ஃபர் மாஃபியாவை ஒழித்துக்கட்டிய அமைச்சர் என்.ஆனந்த்!

Published : Jul 01, 2026, 06:16 PM IST
bussy anand

சுருக்கம்

TVK Vijay: முதல்வர் விஜயின் வழிகாட்டுதலின் கீழ், அமைச்சர் என்.ஆனந்த் ஊரக வளர்ச்சித் துறையில் லஞ்சம் மற்றும் பரிந்துரைகள் இன்றி, தகுதியின் அடிப்படையில் பணியிட மாறுதல்களை நிகழ்த்தியுள்ளார். இந்த நேர்மையான நடவடிக்கை, ஊழலற்ற தூய ஆட்சியின் தொடக்கமாகப் பார்க்கப்படுவதுடன், அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

"அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம்..." என்ற முழக்கங்கள் தமிழக தேர்தல் களம் எங்கும் எப்போதும் ஒலிப்பதுதான். ஆனால், அந்த மாற்றத்தை அதிகாரப் பூர்வமாக, அரசாங்கக் கோப்புகளில் அரங்கேற்றிக் காட்டுவது அத்தனை எளிதான காரியமல்ல. காலம் காலமாகப் புரையோடிப் போயிருக்கும் லஞ்ச லாவண்ய சிஸ்டத்தையும், பரிந்துரை கலாச்சாரத்தையும் வேரோடு பிடுங்கி எறிய துணிச்சலும், நேர்மையான தலைமையும் தேவை.

அப்படி ஒரு ‘அரசியல் சர்ஜிகல் ஸ்டிரைக்கை’த்தான் தற்போதைய முதலமைச்சர் விஜயின் வழிகாட்டுதலில், அவரது முதன்மைப் படைத்தளபதியும் அமைச்சருமான என்.ஆனந்த் கையில் எடுத்துள்ளார். தமிழக அரசியலில் விஜயின் நிழலாக, உள்கட்டமைப்பின் தூணாக விளங்கும் அமைச்சர் ஆனந்த், தற்போது கோட்டை நிர்வாகத்திலும் தனது விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். முந்தைய ஆட்சிக்காலங்களில் ‘டிரான்ஸ்ஃபர் மாஃபியா’க்களின் கூடாரமாக, திரைமறைவு பேரங்களின் மையமாகப் பார்க்கப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், எவ்வித லஞ்சமும், அரசியல் அழுத்தமும் இன்றி, முற்றிலும் தகுதியின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ள பணியிட மாறுதல்கள் ஒட்டுமொத்த கோட்டையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தூய ஆட்சியின் புதிய இலக்கணம்

தமிழக அரசியலில் 'மாற்றம்' என்கிற ஒற்றை முழக்கத்தோடு களம் கண்டு, இன்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள முதல்வர் விஜயின் முதன்மை நோக்கம், ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, தகுதியானவர்களுக்கு முன்னுரிமை. இந்த லட்சியத்தை வெறும் மேடைப் பேச்சோடு நிறுத்தாமல், அரசு நிர்வாகத்தில் அரசாணையாக மாற்றி காட்டி வருகிறார் அவருக்கு மிக நெருக்கமானவரும், தற்போதைய அமைச்சருமான என்.ஆனந்த்.

விஜயின் மனமறிந்த ‘நம்பர் ஒன்’ தளபதி

முதல்வர் விஜயின் 'மக்கள் இயக்கம்' தொண்டர் அமைப்பாக இருந்த காலம் தொட்டு, இன்று அது ஆளும் கட்சியாக உருவெடுத்திருக்கும் வரை அனைத்து நெருக்கடியான காலகட்டங்களிலும் அரணாக நின்றவர் என்.ஆனந்த். முதல்வர் விஜயின் அரசியல் நகர்வுகள், வியூகங்கள், மற்றும் கொள்கைகளை அடிமட்டம் வரை கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு.விஜய் எதை விரும்புகிறார். தமிழகத்திற்கு எத்தகைய ஆட்சியை வழங்க நினைக்கிறார் என்பதை வார்த்தைகளால் சொல்லாமலேயே புரிந்து கொண்டு செயல்படுவதால் தான், விஜயின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் என்.ஆனந்த் எப்போதும் 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கிறார். "ஊழலை வேரறுக்க வேண்டும், தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்கு தூய நிர்வாகத்தை வழங்க வேண்டும்" என்கிற முதல்வர் விஜயின் தாரக மந்திரத்தை அப்படியே தனது துறையில் செயல்படுத்த தொடங்கியுள்ளார் அமைச்சர் ஆனந்த்.

ஊரக வளர்ச்சித் துறையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்

அரசு நிர்வாகத்தில் 'பணியிட மாறுதல்' மற்றும் 'பதவி உயர்வு' என்பது முந்தைய ஆட்சிக்காலங்களில் பெரும் நெருக்கடிகளுக்கும், லஞ்சப் புகார்களுக்கும் பெயர்போன ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்தது. குறிப்பாக, அடிமட்ட மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை போன்ற முக்கிய துறைகளில், செல்வாக்குமிக்க பணியிடங்களைப் பிடிக்க கடுமையான போட்டிகளும், திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளும் நடப்பது வாடிக்கையாக இருந்தது. ஆனால், தற்போதைய ஆட்சியில் அந்தப் பிம்பம் முற்றிலுமாக உடைத்தெறியப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - ஊரக வளர்ச்சி இணை இயக்குநர் நிலையில் பணியிட மாறுதல் ஆணை அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

எவ்வித லஞ்சமும் இல்லாத நேர்மை

இந்த முறை பணியிட மாறுதலுக்காக எந்தவொரு அதிகாரியிடம் இருந்தும் எவ்வித பலனும் எதிர்பார்க்கப்படவில்லை. தகுதி மற்றும் நேர்மையின் அடிப்படையில் மட்டுமே பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. பரிந்துரைகளுக்கோ, அரசியல் அழுத்தங்களுக்கோ இடம் தராமல், யார் எந்தப் பணிக்குத் தகுதியானவர், யாருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற விதிமுறைகள் நூறு சதவீதம் வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டுள்ளன.

அதிகாரிகள் மத்தியில் மகிழ்ச்சி

வழக்கமாகப் பணியிட மாறுதல் உத்தரவு வரும்போது அச்சத்தோடும், அதிருப்தியோடும் இருக்கும் அதிகாரிகள், இந்த முறை தங்களுக்குக் கிடைத்த நியாயமான அங்கீகாரத்தைக் கண்டு நிம்மதியும் பெருமகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். "நேர்மையாக உழைத்தால் நமக்கான அங்கீகாரம் தானாகத் தேடி வரும்" என்கிற நம்பிக்கை அரசு அதிகாரிகள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.

தூய ஆட்சியின் பின்னணி

அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் இந்தத் துறையில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடியான நேர்மையான நடவடிக்கை, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்திற்கும் ஒரு முன்னோடியாகி இருக்கிறது. முதல்வர் விஜயின் நேரடி கண்காணிப்பும், ஊழலுக்கு எதிரான அவரது உறுதியான நிலைப்பாடும் தான் அமைச்சர்களுக்கு இத்தகைய சுதந்திரமான, நேர்மையான முடிவுகளை எடுக்க முழு தைரியத்தை அளிக்கிறது. லஞ்சம் கொடுக்காமல் தகுதியின் அடிப்படையில் இடமாறுதல் பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதால், அதிகாரிகள் எந்தவித அரசியல் அழுத்தமும் இன்றி, மக்களுக்கான பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

நேர்மையான அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளுக்கு வரும்போது, கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள், ஊரக உள்கட்டமைப்பு மற்றும் ஊராட்சி அளவிலான நிதிப் பங்கீடுகளில் எவ்வித தொய்வும் இன்றி 100% மக்களைச் சென்றடையும். அரசியல் கட்சியை வழிநடத்துவது ஒரு சவால் என்றால், ஆட்சியைத் தூய்மையாக நடத்துவது அதைவிடப் பெரும் சவால். அந்தச் சவாலைத் தனது நிர்வாகத் திறமையால் சாதித்துக் காட்டியுள்ளார் அமைச்சர் என்.ஆனந்த். விஜயின் அரசியல் லட்சியங்களுக்குப் பக்கபலமாக இருந்து, நிர்வாகத்தில் அவர் காட்டி வரும் இந்த வெளிப்படைத்தன்மை, "விஜயின் படைத்தளபதிகளில் என்.ஆனந்த் ஏன் எப்போதும் நம்பர் ஒன்" என்பதற்கான விடையை தமிழக மக்களுக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளது. இந்த மாற்றம் தொடரும் பட்சத்தில், தமிழக அரசு நிர்வாகம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DMK: கைதாகிறார் திமுக முன்னாள் அமைச்சர்? என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்
போர்க்கொடி தூக்குகிறதா கம்யூனிஸ்ட் கட்சிகள்? முதல்வர் விஜயுடனான சந்திப்பிற்குப் பின் வெடித்த பேட்டி!