வேலூரில் தனிமைச் சிறை! அறைக்குள் பாம்பு! உயிருக்கு போராடும் திருமுருகன் காந்தி!

By vinoth kumarFirst Published Sep 25, 2018, 10:01 AM IST
Highlights

வேலூர் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கு பேராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலூர் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐநா மனித உரிமை ஆணையத்தில் பேசியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 40 நாட்களுக்கும் மேலாக வேலூரில் தனிமைச்சிறையில் திருமுருகன் காந்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது கட்சியினர் புகார் கூறி வருகின்றனர்.

 

இந்த நிலையில் அவரது கட்சியினல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில்:- 45 நாட்களாக திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். பகலில் கூட சிறையில் இருக்கும் மற்றவர்களை அவர் சந்திக்கவோ, பேசவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவர் சிறை வைக்கப்பட்டிருக்கும் தனி சிறை அறையானது கடந்த இரண்டு ஆண்டு காலமாக எவருமே தங்காத பழைய கட்டிடமாகும். அந்த அறையில் காற்றோட்டம் கூட சரியாக இல்லாததால் சுவாசக் கோளாறு பிரச்சினையும் அவ்வப்போது ஏற்பட்டுள்ளது.

தூசி படிந்த, பூச்சிகள் பெருமளவில் நுழையும் சுகாதாரமற்ற அறையாக திருமுருகன் அடைக்கப்பட்டிருக்கும் சிறை அறை இருக்கிறது. அறைக்கு அருகில் புதர் மண்டியிருப்பதால் ஒரு நாள் பகல் நேரத்தில் பாம்பு ஒன்று அறைக்குள் நுழைந்திருக்கிறது. பகல் நேரமாக இருந்த காரணத்தினால்  அதனை கவனித்து விரட்ட முடிந்திருக்கிறது. 

முறையான உணவும் வழங்கப்படுவதில்லை. நீதிமன்றங்களுக்கு அழைத்து வரும் நேரத்திலும் மதிய நேரத்தில் உணவு பெரும்பாலான நேரங்களில் வழங்கப்படுவதில்லை. சிறைக்குள் வழங்கப்படும் உணவும் சுகாதாரமான உணவாக இருப்பதில்லை. பல நேரங்களில் வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. நேற்று முந்தினம் சனி காலை சிறையில் வழங்கப்பட்ட சேமியாவினை உண்டுவிட்டு உள்ளே நின்றிருந்த போது திருமுருகன் காந்தி சிறைக்குள் மயங்கி விழுந்திருக்கிறார். அப்போது அந்த வழியே வந்த காவல் பணியாளர் ஒருவர் எதேச்சையாக பார்த்து அவரை தோளில் தூக்கி சென்று சிறை மருத்துவரிடம் கொண்டு சென்றிருக்கிறார். 
 
தொடர்ச்சியான சுகாதாரமற்ற உணவாலும், காற்றோட்டம் இல்லாததாலும் திருமுருகனின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் நலிவுற்றிருக்கிறது. நேற்று ஞாயிறு அன்று சிறையிலிருந்து வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் குடும்பத்தினருக்கோ, வழக்கறிஞருக்கோ எவருக்கும் அத்தகவல் அளிக்கப்படவில்லை. இன்று திங்கள் கிழமை என்பதால் சிறையில் மனுபோட்டு சந்திக்க குடும்பத்தினரும் சென்ற போதுதான், இன்று மீண்டும் அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்பது தெரிய வந்தது. இன்றும் அவரது உடல் நிலைக் குறைவு குறித்த எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. 

இன்று அடுக்கம்பாறை மருத்துவமனையில், முதலில் திருமுருகன் காந்தியை பரிசோதித்த மருத்துவர் இரண்டு நாட்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தவர், பின்னர் சிறிது நேரம் கழித்து என்ன காரணத்திற்காக அனுமதிக்க தேவையில்லை என்று சொன்னார். இது ஏன் என்பது தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது என்று எவரிடமிருந்து அழுத்தம் வந்தது என்பதும் தெரியவில்லை.

முறையான உணவு இல்லாததால் திருமுருகன் காந்திக்கு ரத்த சர்க்கரை குறைவும், ரத்த அழுத்தக் குறைவும் ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் சிறையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!