
கருணாநிதி நினைவு நாள்
முன்னாள் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவராக அரை நூற்றாண்டு காலம் பதவி வகித்து மறைந்த கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் திமுக தலைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக அமைதி பேரணியும் நடைபெற்றது. இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மக்களிடையே வெறுப்பை பரப்பும் அரசியல்
இந்த நிலையில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், சொல்லாகவும் - செயலாகவும் நம் நினைவெல்லாம் நிறைந்து, நாள்தோறும் வழி நடத்திக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று. மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலருண்டு; அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர். கலைஞர் அவர்களின் தொலைநோக்கு, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது.
மீண்டும் திராவிட மாடல் அரசு
கலைஞர் அவர்களின் கொள்கை உறுதி, சமூக நீதி - மாநில சுயாட்சி - மொழி உரிமை எனும் தமிழ்நாட்டின் அரசியல் முழக்கத்தை, பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கச் செய்திருக்கிறது. ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் ; வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்கக் கொள்கைகளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் நம் கலைஞர் அவர்கள்.முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம் என உதயநிதி தெரிவித்துள்ளார்.