பதின்மூன்று வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இரண்டு போரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்
சென்னை அருகே பனையூரில் நடந்துள்ளது. என் மகளுக்கு நடந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்று இளம் பெண்ணின் தாய்,
இன்ஸ்பெக்டரிடம் கண்ணீர்விட்டு கதறியுள்ளார்.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கானாத்தூர் போலீஸ்
நிலையத்துக்கு தன்னுடைய 13 வயது மகளை அழைத்துக் கொண்டு வந்தார்.
அப்போது, இன்ஸ்பெக்டர் ரியாஸ்சுதினிடம் இவர் கண்ணீர்மல்க ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் என்னுடைய மகள் வீட்டின் முன்பு
விளையாடிக் கொண்டிருந்தார். பனையூரைச் சேர்ந்த ரகமத்துல்லா மற்றும் நண்பர் சாகுல் இருவரும், என் மகளை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவளிடம் தகாத முறையில் அவர்கள் நடந்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெளியில் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் என் மகளை மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன என் மகள் எதையும் என்னிடம் கூறவில்லை. ஆனால், உடலளவிலும் மனதளவிலும் மகள் மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். அது
குறித்து நான் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை சொல்லி கதறி அழுதார். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
இன்ஸ்பெக்டரிடம் ரேவதி கூறினார்,
இதையடுத்து போலீசார் ரேவதி குறிப்பிட்ட நபரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், 13 வயது இளம் பெண்ணிடம் ரகமதுல்லா மற்றும் அவரது நண்பர் சாகுல் எல்லை மீறி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கைதானவர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.