
விஜய் பிரசாரம் செய்த கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கரூர் துயரம் தொடர்பாக அரசு தரப்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக அரசை குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் அண்ணாமலையையும் RN.ரவியையும் பின்பற்றுகிறார் விஜய் என்று அன்றே சொன்னேன். அதை நாளும் நிரூபிக்கிறார் விஜய் என ஆளூர் ஷா நவாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாகை தொகுதி எம்எல்ஏவும், விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: விஜய்யிடம் அரசியல் கூர்மை இல்லை என்று தான் நினைத்தோம். அவர் வெளிவர வெளிவரத் தான், துளி கூட அவரிடம் அரசியல் நேர்மை இல்லை என்பது அம்பலமாகிறது.
"திட்டமிட்ட நாளில் வராமல் திடீரென கரூர் வந்தது, குறித்த நேரத்தில் வராமல் மிகமிக தாமதித்தது, குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக கூட்டத்தை வரவைத்தது, கூடிய மக்களுக்கு குடிக்க தண்ணீர் ஏற்பாடு கூட செய்யாதது, நீதிமன்றம் சொல்லியும் கேட்காமல் குழந்தைகள் பெண்களை திரட்டியது, போலீஸ் எச்சரித்தும் கேட்காமல் கூட்டத்தில் புகுந்தது, ஜெனரேட்டர் பகுதியை சூறையாடியது, ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியது, பிரச்சனை என்ற உடன் ஓடி ஒளிந்தது, மக்களை சந்திக்காமல் கட்சி கட்டமைப்பே கள்ள மெளனம் காத்தது" என்று ஓராயிரம் பிழைகள் செய்தும், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காதது மட்டுமல்ல, முதலமைச்சருக்கு சவால் விட்டு சண்டைக்கும் இழுக்கிறார் விஜய். மூன்று நாட்களாக முக்கி முக்கி விஜய்க்கு முட்டுக் கொடுத்தவர்கள் கூட, வெட்கித் தலைகுனியும் அளவுக்கு விஜய்யின் ஒற்றை வீடியோ அமைந்துவிட்டது.
மற்றொரு பதிவில் பொய் சொல்வதில், புரட்டு பேசுவதில், வன்மத்தை உமிழ்வதில், போகிற போக்கில் அடித்து விடுவதில், எதற்கும் பொறுப்பேற்காமல் கல் மனதுடன் வெளிப்படுவதில், அண்ணாமலையையும் RN.ரவியையும் பின்பற்றுகிறார் விஜய் என்று அன்றே சொன்னேன். அதை நாளும் நிரூபிக்கிறார் விஜய்.
விஜய், பக்காவான RSS BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது. பிரச்சனை என்ற உடன் வழக்கமாக மன்னிப்பு கேட்டு எஸ்கேப் ஆவார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். விஜய் அதில் மட்டும் மாறுபட்டு மன்னிப்பு கேட்காமல் எஸ்கேப் ஆகிறார் என தெரிவித்துள்ளார்.