
TVK Aadhav Arjuna Slams DMK : வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைப் பார்த்து ஆளும் திமுக பயந்துவிட்டது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கிண்டலாகத் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவினர் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினாலும், திருச்சி கிழக்கு தொகுதியில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் முகாமிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
"‘நாங்கள் தவெக-வுக்கோ விஜய்க்கோ பயப்படவில்லை’ என்று திமுகவினர் சொல்கிறார்கள். ஆனால், விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில், முதல்வரும் மற்ற அமைச்சர்களும் ஓட்டு சேகரிப்பதற்காக மார்னிங் வாக் போய்க்கொண்டிருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
மேலும், அந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பற்றிக் குறிப்பிட்ட அர்ஜுனா, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் தொகுதியை கண்டுகொள்ளவே இல்லை என்று குற்றம்சாட்டினார்.
"ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராத எம்.எல்.ஏ, இப்போது தேவையில்லாமல் வருகிறார். தொகுதியில் உள்ள மக்களுக்கு அவரது பெயர் கூடத் தெரியவில்லை," என்று குறிப்பிட்ட அவர், இதுபோல மக்கள் பிரதிநிதிகள் மக்களைச் சந்திக்காமல் இருப்பது மாநிலத்தின் பல தொகுதிகளில் நடப்பதாகக் கூறினார்.
நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் திமுக-வின் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி. சேகரையும், திருச்சி கிழக்கில் இன்பதுரை இருதயராஜையும் எதிர்த்து அவர் களம் காண்கிறார். பெரம்பூர் தொகுதி 2016 வரை சிபிஐ(எம்) கட்சியின் கோட்டையாக இருந்தது. 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து ஆர்.டி. சேகர் அங்கு எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.
தவெக தனது தேர்தல் அறிக்கையில், "போதைப்பொருள் எதிர்ப்பு பாதுகாப்பு மண்டலங்கள்" மற்றும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளது. பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ந் தேதி அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும். அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டை யார் ஆட்சி செய்யப் போகிறார் என்பதை தீர்மானிக்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சி உள்ளது.
இந்தத் தேர்தலில் முக்கியப் போட்டி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) இடையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நடிகர் விஜய் இந்தத் தேர்தலை மும்முனைப் போட்டியாக மாற்ற முயற்சிப்பார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதில் குறிப்பாக அக்கட்சித் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் களமிறங்குகிறார். அக்கட்சியினரை ஆதரித்து விஜய் தற்போது சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் தவெகவின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள வில்லிவாக்கம் தொகுதியில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.